“ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்” சேவைக்கு 44,677 முறைப்பாடுகள் குவிந்தன-

maithri‘ஜனாதிபதியிடம் கூறுங்கள்’ நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 44,677 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளர் சிரால் லக்திலக்க தெரிவித்துள்ளார். ‘ஜனாதிபதியிடம் கூறுங்கள்’ நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலக உத்தியோகத்தர்கள் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நல்லாட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட நிறைவையொட்டி பொதுமக்களின் நன்மை கருதி கடந்த ஜனவரி 08ஆம் திகதி இத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தச் சேவையினூடாக சகல மக்களின் குறைகளையும் கேட்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை உரிய அமைச்சுக்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களிலிருந்து அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தினால் இச் சேவை நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார். தற்போது இரண்டு மாதங்களே கடந்துள்ள நிலையில் சுமார் 44,677 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தொலைபேசியினூடாக 22,947 முறைப்பாடுகளும், தபால் மூலமாக 11,636 முறைப்பாடுகளும், இணையத்தளங்களூடாக 10,094 முறைப்பாடுகளும், கிடைத்துள்ளதாகத் கூறினார். கிடைக்கப்பெற்ற பிரச்சினைகளில் 8,092 பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன. முறைப்பாடுகளில் 1,062 முறைப்பாடுகள் இதுவரையில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. தற்போது 14,976 முறைப்பாடுகளுக்கான தீர்வுகளுக்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இன்னும் 19,624 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட வேண்டிய நிலையிலுள்ளன. சுமார் 923 முறைப்பாடுகள் தீர்வுகாண முடியாத நிலையிலுள்ளதாகவும் ஒருங்கிணைப்பாளர் சிரால் லக்திலக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.