சம்பூர் மகா வித்தியாலயத்தில் 10 வருடங்களின் பின் கற்றல் நடவடிக்கை-

uyuyதிருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் கடற்படையினரின்; வசமிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (25) விடுவிக்கப்பட்ட 177ஏக்கர் காணியில் அமைந்திருந்த சம்பூர் மகா வித்தியாலயம் 10 வருடங்களின் பின்னர் இன்று முதல் மீளவும் செயற்படத் தொடங்கியுள்ளதாக கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்தார். சம்பூர் பிரதேசத்தில் அமைந்துள்ள காளி கோவிலில் பூஜை வழிபாடுகள் நடைபெற்று, பின்னர் இவ்வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆண்டு ஒன்று தொடக்கம் ஆண்டு 13வரை கற்கின்ற 411 மாணவர்களுடன் 21 ஆசிரியர்களும் இவ்வித்தியாலயத்துக்கு சமூகமளித்துள்ளனர். அத்துடன், இவ்வித்தியாலயத்தில் முதலாம் தவணைப் பரீட்சையும் இன்றையதினம்; ஆரம்பமாகியுள்ளது. மேலும், மீள்குடியேறிய குடும்பங்களைச் சேர்ந்த புதிய மாணவர்கள் 11 பேர் இவ்வித்தியாலயத்தில் சேர்ந்துள்ளதாகவும் அவ்வித்தியாலய அதிபர் எஸ்.பாக்கியசீலன் தெரிவித்தார். படையினரின் பராமரிப்பிலிருந்த இவ்வித்தியாலயமும் அதன் வளாகமும் நல்ல நிலையிலிருப்பதாகத் தெரிவித்த அதிபர், இவ்வித்தியாலயத்துக்கு மின்சார வசதி இல்லையெனவும் கூறினார். கட்டடம் சேதமடைந்து காணப்படும்; சம்பூர் ஸ்ரீ முருகன் வித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்கள் சுமார் 75 பேரும் சம்பூர் மகா வித்தியாலயத்தின்; ஒருபகுதியில் தமது கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். 2006ஆம் ஆண்டு மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, சம்பூர் பிரதேச மக்கள் இடம்பெயர்ந்திருந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

திருப்பெருந்துறையில் யுவதியின் சடலம் மீட்பு-

dead.bodyமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறைப் பகுதியில் பெண்ணொருவர் நீர்க்குழியிலிருந்து சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி, எருவில் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் சுலோக்ஸனா (வயது 17) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. மேற்படி பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து தொழில் பயிற்சிநெறியை மேற்கொண்டுவந்த இந்தப் பெண் காணாமையைத் தொடர்ந்து, அவ்விடுதியிலுள்ள ஏனையோர் தேடியுள்ளனர். இதன்போது, இவரது சடலம் அருகிலுள்ள நீர்க்குழியில் கிடந்ததை அவதானித்துள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு தமக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர

இலங்கை அகதிகளில் ஒரு தொகுதியினர் நாடு திரும்பல்-

srilanka refugeesதமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளில் ஒரு குழுவினர் தாயகம் திரும்பியுள்ளனர் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளில் ஒரு குழுவினரே இன்று தாயகம் திரும்பியுள்ளனர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஊயர்ஸ்தானிகராலயத்தின் வசதிப்படுத்தலின் கீழ், இன்று நண்பகல் 18 பேர் நாடு திரும்பியதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாடு திரும்பிய அகதிகள் 18 பேரில் 08 பெண்களும் 10 ஆண்களும் உள்ளடங்குவதாகவும் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானஜோதி தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தவர்களில் சிலரே இன்று நாடு திரும்பியுள்ளனர். இவர்களுக்கான இலவச விமானச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதுடன், மீள்குடியேற்றத்திற்கான ஒரு தொகை பணமும் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானஜோதி குறிப்பிட்டுள்ளார்.

வித்தியா கொலைச் சந்தேகநபர்களை விசேட அனுமதியுடனே சந்திக்கலாம்-

vithyaபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில், 5ஆம் மற்றும் 6ஆம் சந்தேகநபர்களை, நீதிமன்றத்தில் விசேட அனுமதியைப் பெற்றுச் சந்திக்க முடியும் என்றும் சாதாரணமாகச் சந்திக்க முடியாது எனவும் ஊர்காவற்றுறை நீதவான் ஏம்.எம்.எம்.றியால் தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு இன்று நீதிவான் றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கதைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குறித்த சந்தேகநபர்கள் சார்பாக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி கோரினார்.இதன்போதே, ஊர்காவற்றுறை நீதவான் ஏம்.எம்.எம்.றியால் இவ்வாறு தெரிவித்தார். டி.என்.ஏ அறிக்கை மற்றும் சான்று பொருட்களின் பகுப்பாய்வு அறிக்கைள் என்பன குற்றப்புலனாய்வு பொலிஸாரால் இன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும், இவ்வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா திறந்து வைப்பு-

7687இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா இன்று ஹம்பாந்தோட்டை, ரிதிகம பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிடுகின்றன.

500 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இச் சபாரி பூங்காவில் சிங்க வலயம், உலக விலங்கு வலயம் மற்றும் ஆசிய யானைகள் வலயம் என மூன்று வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இப் பூங்காவில் 22 வகையான 200 இற்கும் மேற்பட்ட விலங்குகளை காணக்கூடியதாக உள்ளது.

அமெரிக்க புலு ரிச் கப்பலை பார்வையிட்ட ஜனாதிபதி-

6t5767ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான புலு ரிச் கப்பலை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, அமெரிக்க கடற்படையினரால் ஜனாதிபதி கௌரவத்துடன் வரவேற்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

900 அமெரிக்க கடற்படை வீரர்களுடன் ஐந்து நாள் விஜயமாக புலு ரிச் கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இலங்கை சாரணர் சங்க தலைவரின் அஞ்சலி நிகழ்வு.!(படங்கள் இணைப்பு)

scout1இலங்கை சாரணர் சங்கத்தின் முன்னாள் பிரதம ஆணையாளரும், ஆசிய பசுபிக் சாரண வலயத்தின் முகாமைத்துவ உப குழுவின் முன்னாள் பணிப்பாளரும், 2014-2016ஆம் ஆண்டுக்கான சாரணர் சங்கத்தின் தலைவருமான கௌரவ ஊ.பட்டுவன்கல அவர்கள் கடந்த 25.03.2016 அன்று கொழும்பில் காலமானார். இவரின் இறுதி நிகழ்வுகள் இன்றையதினம் கொழும்பில் சாரண மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டதுடன், இலங்கை சாரணர் சங்கத்தினால் கடந்த மூன்று தினங்கள் சாரண தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டு, மாவட்டங்கள் தோறும் சாரண கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன், அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வவுனியா திரி சாரணர், ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் இன்றையதினம் அஞ்சலி கூட்டம் வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் உதவி மாவட்ட ஆணையாளர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது. இவ் அஞ்சலி நிகழ்வில் கௌரவ மாவட்ட ஆணையாளர் எம்.எஸ்.பத்மநாதன், உதவி மாவட்ட ஆணையாளர் திரு.கு.கமலகுமார், பெண் சாரண தலைவி திருமதி மோ.சுதர்ஷினி, திரி சாரணர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அமரர் உ.பட்டுவன்கல அவர்கள் 1947 ஆம் ஆண்டு தனது 12ஆவது வயதில் சாரணர் அமைப்பில் இணைந்து கொண்டதுடன் தனது சாரணர் வாழ்கையில் கால் பத்தித்தவர், 1958 ஆம் ஆண்டு பெரதெனிய இலங்கை பல்கலைக்கழகத்தில் தனது இளமானிப்பட்டத்தை பெற்றுக்கொண்டதுடன். தொடர்ந்து கட்டுகஸ்தோட்ட ராகுல வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், பின்னர் இலங்கை இறப்பர் கூட்டுறவு உற்பத்தி சபையின் பொது முகாமையாளராகவும் கடமையாற்றினார். பின்னர் 1989 -1994 வரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்ட சாரண ஆணையாளராகவும், 1994 ஆம் ஆண்டு மேல் மாகாண உதவி சாரண ஆணையாளராகவும், தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு பிரதி பிரதம ஆணையாளராகவும், தொடர்ந்து 2007-2012 வரையான காலப்பகுதியில் இலங்கை சாரணர் சங்கத்தின் 17 ஆவது பிரதம ஆணையாளராகவும் செயற்பட்டதுடன், இலங்கை சாரணர் சங்கத்தின் 7 மாடிகள் கொண்ட தலைமை காரியாலயத்தினை நிறுவுவதற்கு ஆரம்ப வழிகாட்டலையும் திட்டமிடலையும் தொடர்ந்து முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 2014-2016 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் சாரணர் சங்க தலைவராக போட்டிகள் எதுவுமின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதுடன். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 9வது சாரணர் தேசிய ஜம்போறியிலும் தனது சாரண பணியினை செவ்வனே செய்து தனது 81 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

scout2 scout3 scout4 scout5 scout6 scout7 scout8 scout9 scout10 scout11