பேரவையின் இறுதி வரைபு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையளிப்பு-
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதிவரைபு வெளியிடப்பட்ட நிலையில், நேற்று அது உத்தியோகபூர்வமாக பிரித்தானிய அரசாங்க தரப்பிடமும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் கையளிக்கப்பட்டது. பேரவையின் செயற்பாட்டுக்குழு இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் தலைமையில் ஐவர் கொண்ட குழு குறித்த வரைபை கையளித்துள்ளது. நேற்று முற்பகல் ஐரோப்பிய ஒன்றிய அரசியல் விவகார பொறுப்பாளர் போல் கொட்விரியும், பின்னர் பிரித்தானிய உயர்ஸ்தானிகரக அரசியல் பொறுப்பாளர் டானியல் பெயின்டரும் தீர்வு திட்ட வரைபு பிரதிகளை பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து பேரவை உறுப்பினர்களுக்கும், அரசியல் இராஜதந்திரிகளிற்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இதன்போது, பேரவை உறுப்பினர்கள், இதுவரை காலமாக தமிழ் மக்கள் எதை தமக்கு தீர்வாக எதிர்பார்கிறார்கள் என்ற ஒரு தீர்க்கமான திட்டம் உருவாக்க எவரும் முன்வராதது குறித்து எடுத்துரைத்தனர். அத்துடன், தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களுக்கு செவிமடுக்காததாலும், தமிழ்மக்களின் இழப்பை எவரும் சரியாக கண்டுகொள்ளாததாலும், தொடர்ந்தும் ஏமாற்றப்படும் நிலை உள்ளது. இத்தருணத்தில் இதுதான் தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு என மக்கள் கலந்துரையாடல் மூலம் ஒரு திட்டம் உருவாக்கி அதனை சர்வதேசத்திடம் சமர்ப்பித்து, தீர்வுத்திட்டம் ஒன்று முழுமையாக பெற்றத்தரப்பட வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மாத்திரமே தமிழ்மக்கள் தமது சுயகொளரவத்துடனும், சமஉரிமையுடனும் வாழமுடியும் எனபதை பேரவையின் செயற்பாட்டுக்குழு, ராஜதந்திரிகளிடம் தெளிபடுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் தின பாதுகாப்புக்காக 5000 பொலிஸார் கடமை-
நாளை தொழிலாளர் தினத்தன்று பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 5000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
நாளை காலை முதல் இந்த பொலிஸ் அதிகாரிகளை பாதுகாப்பு பணிகளில் இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் தின நிகழ்வுகள் மற்றும் பேரணிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 3100 பொலிஸ் அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். இதுதவிர போக்குவரத்து கடமைகளுக்காக 1900 பொலிஸ் அதிகாரிகள் இணைத்துக் கொள்ளகப்பட உள்ளனர்.
முச்சக்கர வண்டிகளுக்கும் ஆசனப்பட்டி-
முச்சக்கர வண்டிகளுக்கு ஆசனப்பட்டி அணிவதை பரிந்துரை செய்வதற்கு வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை தீர்மானித்துள்ளது.
முச்சக்கர வண்டி விபத்துக்களால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் குறித்து அவதானம் செலுத்தியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் டாக்டர் சிசிர கோந்தகொட கூறியுள்ளார்.
முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்டபோது மேலும் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறித்த பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்குறிய சட்டம் குறுகிய காலத்தில் இடம்பெறும் என்று வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் தெரிவித்தார்.
ரயிலில் மோதுண்டு குடும்ப பெண் மரணம்-
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி இன்றுகாலை 06.10க்கு புறப்பட்டுச் சென்ற உதயதேவி புகையிரதத்தில், மாவடிவேம்பு கிராம அபிவிருத்தி சங்க வீதியைச் சேர்ந்த
நான்கு பிள்ளைகளின் தாயான கணபதிபிள்ளை ரன்சிதமலர் (வயது 35) என்பவர் தேவபுரம் பகுதியில் வைத்து மோதுண்டு உயிரிழந்துள்ளார் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த அப்பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு உயிரிழந்துள்ளார். இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை செய்கின்றனர்.
நோர்வே விமான விபத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு-
நோர்வேயில் விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் பலியானார்கள். நோர்வேயின் இரண்டு பெரிய நகரான பெர்கானில் அமைந்துள்ள தீவில் இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
2 விமான குழுவினர் மற்றும் 11 பணியாளர்களுடன் பயணித்த ஈரோகொப்டர் ஈசி 225எல் என்ற இந்த விமானத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள ரோட்டர் தனியாக கழன்று 300 மீட்டர் தூரத்தில் சென்று விழுந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் நகரில் அமைந்துள்ள தீவில் வெடித்து சிதறியிருக்கின்றது, இதில் விமானம் முழுவதும் சேதமடைந்ததில் விமானத்தில் பாதிப் பாகங்கள் தரையிலும், மீதி பாகங்கள் தண்ணீரிலும் சிதறியுள்ளன.
கல்முனை வாள்வெட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயம்-
கல்முனை மருதமுனை பகுதியில் வீடொன்றுக்குள் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இன்றுகாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு துறைமுகத்தில் பிரான்ஸ் நாட்டு யுத்த கப்பல்-
நட்புறவு சுற்றுபயணத்தை மேற்கொண்டு பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான எக்கோனிட் என்ற யுத்த கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.
குறித்த கப்பலை பாரம்பரியமாக வரவேற்றதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த யுத்த கப்பல் எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் இருக்கவுள்ளது.
மேதினத்தில் 12 கூட்டங்கள், 16 பேரணிகள் இடம்பெற ஏற்பாடு-
தொழிலாளார் தினமான மே 1ஆம் திகதியன்று 12 பிரதான கூட்டங்கள் மற்றும் 16 பேரணிகளை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
கொழும்பு மற்றும் காலி ஆகிய பிரதான நகரங்களிலேயே பெரும் கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படவுள்ளன.
அதற்கு அப்பால், பெருந்தோட்ட தொழிலாளர்கள் செறிந்து வாழ்கின்ற மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா, தலவாக்கலை உள்ளிட்ட நகரங்களில் கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படவுள்ளன.
Read more