CCTV கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டறிய நடவடிக்கை-

cctv (2)கொழும்பு நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்டறிந்து அது தொடர்பில் அவசர்களின் வீடுகளுக்கு தெரியப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சீசீரிவி காட்சிகளை பயன்படுத்தி இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வீதிப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதற்காக கொழும்பு நகரில் 128 சீசீரிவி கமராக்களை செயற்படுத்தப்படவுள்ளதாகவும், அதனைத்தவிர சீசீரிவி கமாராக்கல் பொருத்திய மூன்று வாகனங்களையும் பயன்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தவறான முறையில் வாகனங்களை செலுத்துவதுபவர்களுக்கு எதிராக இன்றுமுதல் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீசீரிவி கமராக்கள் செயற்படும் பகுதியில் அதிகளவு பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நாட்டு சட்டத்தின் பிரகாரம் பகிரங்க ஆவணங்கள் மூலம் வாகனத்தை கொள்ளவனவு செய்ய முடியாது. வாகனம் விற்பனை செய்பவரைப் போன்று வாகனத்தை கொள்வனவு செய்பவரும் 14 நாட்களுக்குள் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட 169 நாடுகளுக்கு வீசா அற்ற பயண வசதி-

indonesiaஇலங்கை உள்ளிட்ட 169 நாடுகளுக்கு வீசா அற்ற பயண வசதியை இந்தோனேஷியா வழங்கியுள்ளது. பயண விசா விலக்கு தொடர்பான ஜனாதிபதி விதிமுறைகளில் மேலும் 79 நாடுகளை இந்தோனோஷியா கடந்த மாதம் ஆரம்பத்தில் உள்ளடக்கியிருந்தது. குறித்த நாடுகளின் கடவுச் சீட்டை வைத்துள்ளவர்கள் வீசா இல்லாமல் தமது நாட்டிற்கு வருகை தரலாம் என இந்தோனேஷிய குடிவரவு அலுவலகம் கூறியுள்ளது. 30 நாட்களுக்கு மாத்திரமே இந்த வீசா விலக்கு செல்லுபடியாகும் எனவும் குடிவரவு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதன்பிரகாரம் 169 வெளிநாடுகளைச் சேர்ந்த பிரஜைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லை ஊடாக இந்தோனேஷிய நிலப்பரப்பிற்குள் பிரவேசிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுற்றுலா, குடும்ப பயணம், சமூக பயணம், கலை, கலாசார அரச பணி, செயலமர்வில் உரையாற்றுதல், சர்வதேச கண்காட்சியில் பங்குபற்றுதல், இந்தோனேஷியாவிலுள்ள தலைமை அலுவலக அதிகாரிகளுடனான சந்திப்பிற்கென இந்த வீசா விலக்கை பயன்படுத்த முடியும்.

சம்பூரில் மோட்டார் குண்டுகள் மீட்பு-

wellதிருகோணமலை சம்பூர் முருகன் ஆலயத்திற்கு அருகிலுள்ள கிணறொன்றிலிருந்து 60 மில்லிமீற்றர் வகையைச் சேர்ந்த 44 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிணறு அமைந்துள்ள காணி சுமார் 9 வருடங்களாக கடற்படையினரின் வசமிருந்த நிலையில், கடந்த மாதம் 25ஆம் திகதி காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த காணியினை உரிமையாளர்கள் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடும் போது குறித்த மோட்டார் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து பொலிஸார் மற்றும் கடற்படையினர் இந்த ஆயுதங்களை மீட்டுள்ளனர். இதுபற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அதிக வெப்பத்தால் பூநகரியில் பெண் மரணம்-

dead.bodyகிளிநொச்சி, பூநகரி கறுக்காய்தீவைச் சேர்ந்த பெண்ணொருவர் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேயிடத்தைச் சேர்ந்த இராஜேஸ்வரன் செந்தமிழ்செல்வி (வயது 43) என்பவரே அதிக வெப்பம் காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதிக வெப்பத்தினால் மயக்கமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை அன்று அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைத்தியதிகாரி என்.சிவரூபன் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டார். உடலில் நீர்த்தன்மை குறைந்தமையால் இந்தப் பெண் உயிரிழந்ததாக வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பு-

verukal DSதிருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று முதல் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சுமார் 50க்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை உத்தியோகத்தர்கள் கடமைக்காக தனியார் பேருந்தில் இருந்து வரும் போது ஏறாவூர் போக்குவரத்து சபைக்கு சொந்தமான கல்முனை தொடக்கம் திருகோணமலை செல்லும் பஸ் இவர்களது பேருந்தை வழி மறித்துள்ளது. அத்தோடு பஸ் நடத்துனர் மற்றும் சாரதி பிரதேச செயலக ஊழியர்களை தகாத வார்த்தைகளால் ஏசியதுடன், வெருகல் பிரதேச செயலாளருக்கு இரும்பு பொல்லைக் காட்டி அடிப்பதாகவும் மிரட்டியுள்ளனர். இவ்வாறு பிரச்சனை ஏற்படுவதை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளருடன் கூறியதை அடுத்து இவர்கள் பயணம் செய்தபோது இச்சம்பவம் கடும் மோசமாக நடைபெற்றதாகவும், இதனை இவர்கள் நேரடியாக பார்த்ததாகவும் தெரிவித்தனர். இதன் காரணமாக மறுநாள் வெள்ளிக்கிழமை ஊழியர்கள் தங்களுடைய கடமைக்காக பயத்தின் காரணமாக நேரத்திற்கு சென்று விட்டதாகவும், குறித்த சம்பவத்தை கண்டித்தும், உரியவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்த போதும், ஆர்ப்பாட்டம் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு கிட்டாது என்ற வகையில் இதனை கைவிட்டனர் என உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர். குறித்த இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு பிரதேச செயலகத்தினால் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்த முடிவும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்தனர். சேருவில பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் பஸ் சாரதி மற்றும் நடத்துனரை விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். இச்சம்பவம் பல தடவை நடைபெறுவது தொடர்பாக மட்டக்களப்பு, ஏறாவூர், கல்முனை போக்குவரத்து சபைக்கு பல தடவை பிரதேச செயலாளரால் தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் நடைபெறவில்லை. இச்சம்பவம் தொடர்பாக பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டபோது இன்று அலுவலக உத்தியோகத்தர்கள் எவரும் கடமைக்கு சமூகம் தரவில்லை எனவும், இது தொடர்பாக நாளை கடமைக்கு சமூகமளிக்குமாறும் உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக கல்முனை தொடக்கம் திருகோணமலை வரை செல்லும் தனியார் மற்றும் போக்குவரத்து சபை போக்குவரத்து பேருந்துகள் பயணிகளின் நலன் கருதாது நடத்துனர், சாரதிகள் தகாத வார்த்தைகளால் பேசப்படுவதுடன், அதி வேகமாக ஏட்டிக்குப் போட்டியாக வாகனங்களை செலுத்துவதால் பல விபத்துக்களும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சம்பவங்களினால் அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், குறித்த வீதியில் இவ்வாறு பயணம் செய்யும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து பேருந்து நடத்துனர்களுக்கும், உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். குறிப்பாக இப்பிரதேசத்தில் பல்வேறுபட்ட பிரச்சனைகள் காணப்படுகின்ற நிலையில் மாவட்ட அரசியல்வாதிகள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வருவதில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.