வடக்கில் தற்கொலை அங்கி விவகாரம் இராணுவம் செய்திருந்தால் பாரதூரமானது,அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும்-த.சித்தார்த்தன் எம்.பி-
அரசாங்கம் நல்லிணக்கம், அரசியல் தீர்வு என எல்லா விடயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வடக்கில் தற்கொலை அங்கி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை இராணுவம் செய்திருக்குமானால் அது பாரதூரமான விடயமாகும். இவ்விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்புவதை விட அரசாங்கமே அக்கறை காட்ட வேண்டும் என்றும் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் அலுவலகத்தில் அவருடன் இணைந்து கட்சி உறுப்பினர்களைச் சந்தித்ததன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்தக் கருத்தினை வெளியிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சித்தார்த்தன் மேலும் கூறுகையில், வடக்கில் தற்கொலை அங்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் குறித்து இன்னமும் முழுமையான விசாரணைகள் முடிவடையவில்லை. இருந்தாலும் சிங்கள ஊடகங்கள் இதனைப் பிழையான வகைகளில் வெளிப்படுத்தி வருகின்றன. இது உண்மையிலேயே நாட்டுக்குக் கூடாததொரு விடயம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆகவே இதனை நன்றாக உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும்.
இலங்கையில் எதுவும் நடக்கலாம், உண்மையிலேயே என்ன நடந்தது என்பது பற்றி பூரணமாக ஆராய வேண்டும். இது ஒரு முக்கியமானதொரு பிரச்சினை. அதனை விடுத்து பலரும் பலவாறாகப் பேசுவது சரியானது என்று சொல்ல முடியாது, சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் சொல்வது போல் வைத்துத்தான் எடுக்கப்பட்டிருந்தால் இது ஒரு பாரதூரமான விடயம். அரசாங்கம் நல்லிணக்கம், அரசியல் தீர்வு என எல்லாவிடயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறது. ஐ.நா.வில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் உடன்பாட்டாளராக இருந்திருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் அரசாங்கத்திற்குத் தெரியாமல் இராணுவம் இவ்வாறானதொன்றைச் செய்திருக்குமானால் மிகப் பாரதூரமானதொரு விடயமாகும். இதனை எங்களை விடவும் அரசாங்கம் தான் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்தல், தமிழ் மக்கள் பேரவை தொடர்பான விடயங்கள், தன்னுடைய மட்டக்களப்பு விஜயம், இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய சீன உறவின் நெருக்கம், முன்னாள் போராளிகளின் விடயம், அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப் பினர்களான சித்தார்த்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டனர்.