வடமாகாண சபையின் அரசியலமைப்பு யோசனைகள் மீதான விவாதம் ஒத்திவைப்பு
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக வடமாகாண சபையினால் கடந்தவாரம் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மீதான விவாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையினால் கடந்த வாரம் சமர்பிக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த வடமாகாண சபையின் யோசனைகள் முழுமை பெறாத காரணத்தினால் அதன் மீதான விவாதத்தை ஒத்தி வைப்பதாக அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 49 வது விஷேட அமர்வு நேற்று காலை கைதடியில் உள்ள வடமாகாண சபை கட்டிடத்தில் ஆரம்பமானது.
தமிழ் மக்களுக்காக வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைவுத்திட்டம் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனினால் கடந்த வியாழக்கிழமை வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான வடமாகாண சபையின் யோசனைகள் மீதான விவாதம் எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறும் என்றும், அதன் பின்னர் எதிர்வரும் 30ம் திகதி அந்த யோசனைகள் அடங்கிய பிரதி எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தனிடம் கையளிக்கப்படும் என்று அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்பு சம்பவம்; வெளிநாட்டில் உள்ள இருவருக்கு பொலிஸ் வலை
சாவகச்சேரி பிரதேசத்தில் அண்மையில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் கைத்தொலைபேசியை பரிசோதனைக்கு உட்படுத்திய போது குறித்த வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இருவருடனும் தொடர்பு பேணப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
அதன்படி இவர்களுக்கிடையில் நேரடி தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
24 மணித்தியாலத்தில் 215 சாரதிகள் கைது
குடிபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் 24 மணித்தியாலத்திற்குள் 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்.
கைது செய்யப்பட்டவர்களுள் அதிகமானவர்கள் மோட்டார் சைக்கிள் சாரதிகள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
அதன்படி மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் 119 பேர் நேற்றைய தினம் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர முச்சக்கர வண்டி சாரதிகள் 66 பேர், லொறி சாரதிகள் 07 பேர், கார் சாரதிகள் 09 பேர் மற்றும் வேன் சாரதிகள் 04 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
புத்தாண்டு காலத்தில் குடிபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கைளை கடந்த 10ம் திகதி பொலிஸார் ஆரம்பித்தனர்.