இணைந்த வடக்கு கிழக்கு தீர்மானத்துக்கு’ தேசிய காங்கிரஸ் எதிர்ப்பு

national_congressவடமாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பிலான தீர்மானத்துக்கு தேசிய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த வட மாகாண சபையின் தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உதுமா லெப்பை பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.முஸ்லிம்களும் தமிழர்களைப் போன்று தனித்துவமான தேசிய இனம் என்பதை மறந்து தமிழ் அரசியல் தலைமைகள் நடந்து கொள்வதாக கூறிய அவர் அதிகாரப் பகிர்வில், தமிழர் தரப்பு முஸ்லிம்கள் தொடர்பாக தனித்து தீர்மானங்களை எடுப்பது, ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்றும் தெரிவித்தார்.

சனிக்கிழமை அக்கரைப்பற்று நகரில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ எல் அதாவுலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரன தீர்மானம் பிரதானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு இரு மாகாணங்களும் இணைக்கப்படுமாயின் சம அந்தஸ்துடையதாக தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும் அதேபோல் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும் அமையக் கூடியதாக மாகாண எல்லைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அந்தத் தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.