வடமாகாண முதலமைச்சர் கைது செய்யக் கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல

CVK sivagnanamஅரசியலமைப்பு தீர்வுத் திட்டம் குறித்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தாக்கி பேசுவதும், கைதுசெய்ய வலியுறுத்துவதும் தேவையற்ற விடயம் என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி. கே. சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 50வது அமர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடமாகாண சபையின் அரசியலமைப்பின் தீர்வு திட்டத்தில் மாற்றத்தினை மேற்கொள்ளவதற்கான ஆலோசனைகளைப் பெறும் போதே இவ்வாறு கூறினார்.வடமாகாண சபையின் அரசியலமைப்பு தீர்வு திட்ட முன் மொழிவுகள் வெளிவந்த பின்னர், வடமாகாண முதலமைச்சரை கைதுசெய்ய வேண்டுமென தென்பகுதியில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

வடமாகாண முதலமைச்சரின் தனிப்பட்ட கருத்துக்களை வைத்து அரசியலமைப்பு தீர்வுத்திட்டம் முன்மொழியப்படவில்லை. வடமாகாண சபையின் உறுப்பினர்கள் இணைந்து தான் அரசியலமைப்பு தீர்வு திட்ட வரைபினை முன்மொழிந்தார்கள்.

முன்மொழிவுகள் வெளிவந்த பின்னர் வடமாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரனை தாக்குவதும், கைதுசெய்யுமாறு வலியுறுத்துவதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது. வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து வடக்கு மற்றும் கிழக்கில் மட்டுமன்றி இலங்கையில் உருவாக்கப்பட வேண்டிய மாநிலங்கள் பற்றி கூறுகின்றோம்.

இந்த அரசியலமைப்பு தீர்வுத் திட்ட வரைவு மாகாண சபையின் அனைத்து உறுப்பினர்களும் கூட்டாக பேசி எடுத்த தீர்மானம். ஆகவே தனி மனிதனை இலக்கு வைத்து தாக்குவது தேவையற்றது. முதலமைச்சரை மட்டும் தாக்குவது, வடமாகாண சபை உறுப்பினர் 38 பேரையும் தாக்குவதாக அமைகின்றது என்றார்.