புளொட்டின் மேதினச் செய்தி-

ploteமே மாதம் முதலாம் நாள் தொழிலாளர் வர்க்கத்தின் காத்திரமான போராட்டத்தினால் கிடைத்த வெற்றியை குறிக்கும் நாள். ஆனால் இப்போது தொழிலாளர்கள் தமது வெற்றிக்காக போராடும் நாளாக மீண்டும் மாற்றப்பட்டுவிட்டது.

சோவியத் ஒன்றியத்தின் உடைவு, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு துருவ உலக ஒழுங்கு, உலக தாராளமயமாக்கல், தேசிய இனங்களின் எழுச்சி என்று நாம் கண்ட அனைத்து விடயங்களுமே, தொழிலாளர்கள் என்றொரு வர்க்கத்தினர் உலகம் பூராவும் நலிவடைந்து, பிளவுபட்டு, தனித்துவங்களை இழக்க காரணமாகி விட்டதை உணர்கின்றோம்.

தேசிய இனசிக்கலில் தொழிலாளர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் மட்டுமன்றி அவர்களது ஒற்றுமையும், அமைப்பு ரீதியான செயற்பாடுகளும்கூட காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளது. இனரீதியாக, மதரீதியாக, பிரதேச ரீதியாக பிரித்து வைக்கப்பட்டு விட்டனர். தனது நலன்களை தேவைகளை முதலில் காப்பாற்றிக் கொண்டாலே போதும் என்ற மனநிலைக்குள் புகுத்தப்பட்டுள்ளனர்;. தேசிய இனகுழுக்களின் தலைவர்கள், மத அமைப்புகளின் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் உள்ளுர்த் தலைவர்கள் என்று சகலருமே இதற்கு பொறுப்பாளிகள்தான்.

எமது நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் மோசமான நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதொன்றல்ல. இலங்கைத்தீவுக்கு ஆட்சிமாற்றம் கிடைத்தவுடனேயே இங்குள்ள தேசிய அரசியல் தலைமைகள் செய்த மிகப்பெரிய கைங்கரியம், இந்நாட்டில் பிரதான தொழிலாளர் வர்க்கமாக திகழ்ந்த மலையக தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கியமைதான். அன்றிலிருந்து இன்றுவரை, அந்தமக்கள், இந்த நாட்டில் ஏனைய இனங்களுக்கு சமனான உரிமைகளுடன் வாழ கடுமையான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள்.

வர்க்கரீதியான போராட்டங்கள் வெற்றிபெறும்போது அனைத்து விதமான சமூக ஏற்றத்தாழ்வுகள், அடக்குமுறைகள், இனமுரண்பாடுகள், கலாச்சார சீரழிப்புக்களும் முற்றுப்பெற்றுவிடும் என்று எண்ணியிருந்த காலம் மாறி, தேசிய இன சிக்கலுக்கு நியாயமுறையில் விடை காண்பதன்மூலமே வடகிழக்கு பிரதேசத்தில் வாழும் தொழிலாளர் வர்க்கத்தினரின் அடிப்படை பிரச்சினைகளுக்கு விடிவைத்தேடும் நடவடிக்கைகளிற்கு முதலடி எடுத்து வைக்கப்படமுடியும் என்று உறுதியாக நம்பக்கூடிய அளவிலேயே தமிழ்பேசும் மக்கள், குறிப்பாக தமிழினம் இலங்கையில் அவல வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் அனைத்துத் தொழிலாளர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு, அவர்களின் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படுத்தப்படல் வேண்டும். வடக்கு கிழக்கிலுள்ள தொழிற்சாலைகள் மீளவும் இயங்கவைக்கப்பட்டு அங்கிருக்கும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதன்மூலம் அவர்களின் வருமானம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலைகள் நிர்ணயிக்கப்படல் வேண்டும். வடக்கு கிழக்கிலுள்ள மீனவர்கள் சுதந்திரமாகவும், பிற தலையீடுகள் இன்றியும் தங்கள் தொழில்களை மேற்கொள்வதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படல் வேண்டும். வெள்ளம் மற்றும் வறட்சி நிவாரணங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படல் வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அத்துடன், இரு பெரும் தேசியக் கட்சிகளும் இணைந்து ஆட்சி நடாத்துகின்ற இன்றைய அரசியல் சூழ்நிலை, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டிக்கொள்வதற்கு பொருத்தமானதாக இருக்கும் என நம்புகின்றோம். எனவே, இந்த சந்தர்ப்பத்தினைத் தவறவிடாது, உரிய முறையில் பயன்படுத்தி ஒரு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஓர் முறையான அர்த்தபுஷ்டியுள்ள தீர்வே புரையோடிப்போயுள்ள தேசிய இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக அமையுமென்பதை மீண்டுமொருமுறை இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்துகின்றோம்.

ஊடகப் பிரிவு,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)
01.05.2016.