Header image alt text

விஜித்த ஹேரத் கைதாகி பிணையில் விடுவிப்பு-

vijitha herathமக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் பயணித்த வாகனம் நேற்று இரவு இராஜகிரிய பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனம் தொலைபேசிக் கம்பம் ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சம்பவம் தொடர்பில் வெலிகடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட விஜித்த ஹேரத், பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், வாகனம் மோதியதால் தொலைபேசிக் கம்பத்துக்கு ஏற்பட்ட சேதத்தை தானே சரிசெய்வதாக விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புகையிரதக்கடவை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு-

railwayபாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலையிலிருந்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் நாடுமுழுவதிலும் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பணிபுரியும் 2000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளை கடக்கும்போது வாகன சாரதிகள் பாதுகாப்பான முறையில் கடக்குமாறு எச்சரிக்கை விடுத்தே குறித்த ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெடிமருந்துடன் பெண் உட்படநால்வர் கைது-

arrest (9)தடை செய்யப்பட்ட ரி.என்.ரி ரக வெடிமருந்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ். நீர்வேலி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நால்வரை கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று நபர்கள், கல் உடைப்பதற்காக 2 கிலோகிராம் எடையுடைய ரிஎன்ரி ரக வெடிமருந்தைக் கொண்டு சென்றபோது, அவர்களை கைதுசெய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன்போது, அவர்களுக்கு வெடிமருந்தை விற்பனை செய்த பெண் தொடர்பில் தெரியவந்துள்ளது. அதனையடுத்து, 41 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 13 கிலோகிராம் ரிஎன்ரி ரக வெடிமருந்து மீட்கப்பட்டது. கல் உடைப்பதற்காக இந்த வெடிமருந்தை விற்பனை செய்துவந்ததாக கைதுசெய்யப்பட்ட பெண் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸ் செய்திகளை ஊடகங்களுக்கு வழங்க விஷேட சபை-

policeபொலிஸ் திணைக்களத்தின் அனைத்து செய்திகளும் இனி ஊடகப்பணிப்பாளர் சபையின் மூலமே ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமென பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த ஜயகொடி, அஜித் ரோஹன மற்றும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோர் புதிய ஊடகப்பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் செய்திகள் மிகச் சரியாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுவதற்காக குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த சபை உத்தியோகபூர்வமாக அமைக்கப்பட்டதன் பின்னர் மேற்குறிப்பிட்டுள்ள அதிகாரிகளிடம் செய்திகளை பெற்றுக் கொள்ள முடியுமெனவும் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறியுள்ளார்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா நிதியுதவி-

canadaஇலங்கையின் இயற்கை அனர்த்த நிவாரணங்களுக்காக கனேடிய அரசாங்கம் 35 மில்லியன் இலங்கை ஷரூபாய்களை வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரம் இதனை தெரிவித்துள்ளது. இந்த நிதியானது, கனேடிய மனிதாபிமான உதவு நிதியமான சீ.எச்.ஏ.எஃப், அவசர அனர்த்த உதவிநிதியம் மற்றும் குளோபல் எப்ஃபெயர்ஸ் கனடா ஆகிய நிறுவனங்களின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 62 ஆயிரம் பேர் பயன்பெறுவர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சர்வதேச புகைத்தல், மது எதிர்ப்பு தின கண்டனப் பேரணி-

arpattamசர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புளியந்தீவு சமுர்த்தி வங்கி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுர சந்தியில் கண்டன பேரணியொன்று இடம்பெற்றது. இதன்போது மட்டக்களப்பு பிரதேச செயலாளர் தவராஜவுக்கு புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு கொடியினை வழங்கி ஆரம்பித்த பேரணி காந்தி பூங்கா வரைக்கும் சென்றது. இந்த பேரணியில் புகைத்தல் மற்றும் மது போன்ற வற்றால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு கண்டன பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டனர். இந்த நிகழ்வுக்கு முகாமைத்துவ உதவியாளர் கிரிதரன் நிர்மலா, மகா சங்க முகாமையாளர் வாமதேவன் கலைச் செல்வி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர் தவராஜா மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வெள்ளத்தினால் பாதிப்படைந்த வீடுகள் தொடர்பில் கணக்கெடுப்பு-

dsssdவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் தொடர்பிலான கணக்கெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய வீடு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன் செயலாளர் லக்விஜய சாகர பலான்சூரிய தெரிவித்துள்ளார். அடுத்த மாதத்தில் இருந்து ஒன்றிணைந்த வீடுகள் அபிவிருத்தி தொடர்பிலான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்தை மீளமைப்பது குறித்து கலந்துரையாடல்-

europeanஇலங்கையின் அபிவிருத்தி தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்தை மீளமைப்பது குறித்து, அரசாங்கத்துடன் நெருக்கமான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கை ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் செயற்குழு கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. இலங்கை அரசாங்கத்தின் கிராமிய அபிவிருத்திக்கு உதவுவதற்கு அப்பால், இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகளை நடைமுறைப்படுத்தல், நீதியையும் பொறுப்புக் கூறலையும் உறுதிப்படுத்தல் என்ற அம்சங்களில் புதிய மீளமைப்பு திட்டத்தின்படி ஐரோப்பிய ஒன்றியம், இலங்கைக்கு உதவி செய்யவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய வலயப் பிரதானியால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாண சபையின் அனைவருக்கும் அழைப்பாணை-

courtsவட மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை, அந்த மாகாணத்தின் ஆளுனர் மற்றும் மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதி ஆதித்ய காந்த மத்துமபடபெதிகேவினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்க மற்றும் வடமத்திய மாகாண சபையின் கேள்விப் பத்திர நடைமுறையை மீறி, அரச நிர்மாண ஒப்பந்தங்களை, அரசியல் நண்பர்களுக்கு பெற்றுக்கொடுத்ததன் மூலம், முதலமைச்சரும் அவர் சார்ந்தவர்களும், அரச நிதியினை மோசடி செய்துள்ளனர் எனக் கூறி, மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதிவாதிகளின் மோசடி நடவடிக்கைகளை நிறுத்துமாறு மத்திய அரசாங்கத்தால் சுற்றறிக்கைகள் சில வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. எனினும், சட்டத்தை கவனத்தில் கொள்ளாது அவர்கள் செயற்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கனரக வாகன விபத்தில் ஒருவர் பலி-

accidentகிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்தியில் இன்றுகாலை ஏற்பட்ட வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருதநகர் பகுதியை சேர்ந்த, 2 பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகர் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கனரக வாகனம், கரடிபோக்கு பகுதியில் அமைந்துள்ள விகாரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டபோது, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள், கனரக வாகனத்தின் பின்பக்கமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த நபரை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளை செலுத்தியவர், அலைபேசியில் உரையாடியவாறு பயணித்ததாகவும், கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனத்தில் மோதியதாகவும் நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கே.பிக்கு எதிரான மனு ஜுலை 25 இல் விசாரணைக்கு வருகின்றது-

KPகே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஒரு கட்டளையைப் பிறப்பிக்கக் கோரி, ஜே.வி.பியினால் தாக்கல் செய்யப்பட்ட ஆணைகோரும் மனுவை ஜுலை 25 இல் விசாரணைக்கு எடுப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று அறிவித்துள்ளது.

இந்த மனு, நீதியரசர்களான கே. மலல்கொட மற்றும் பத்மன் சூரசேன ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கைத் தொடர வேண்டுமா அல்லது கைவிட வேண்டுமா எனத் தீர்மானிக்குமாறு, மனுதாரருக்கு நீதிமன்றம் பணித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தாயகம் திரும்பினார்-

ranilதென்கொரியாவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜியத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பிரதிநிதிகளும் நேற்றிரவு தாயகம் திரும்பியுள்ளனர். ஹொங்கொங் இலிருந்து புறப்பட்ட பசுபிக் விமானச்சேவைக்கு சொந்தமான 611 என்னும் விமானத்தினூடாகவே இவர்கள் நேற்றிரவு 11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். தென் கொரியாவில் நடைபெறவிருந்த 107 வது ரொட்டரி சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவதற்காகவே பிரதமர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரான பான்கி மூன் ஐ சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் தென் கொரிய பிரதமரான ஹவாங் கியோ ஹ வையும் சந்தித்துள்ளார்.

நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கைக்கு விஜயம்-

sedfaநோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொரே ஹெற்ரம், 4 பிரதிநிதிகளுடன் இலங்கைக்கான தனது 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இவர் இன்று காலை 8.47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.