சரத் பொன்சேகாவுக்கு எதிரான மனு தள்ளுபடி-
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் சரத் பொன்சேகாவை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தாக்கல் செய்த இந்த மனு, பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அல்லாத பொன்சேகாவை தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்தமை சட்டத்துக்கு முரணானது என, இதன்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி கூறினார். எனவே, அந்த நியமனத்தை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறும் அவர் நீதிமன்றில் கோரினார். இந்நிலையில், பொன்சேகாவின் நியமனம் சட்டத்திற்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது என, தேர்தல்கள் ஆணையகத்தின் சார்பில் ஆஜரான அரசதரப்பு வழக்கறிஞர் வாதாடினார். எனவே இந்த நியமனத்தால் பாராளுமன்ற தேர்தல் சட்டம் மீறப்படவில்லை எனவும், இது குறித்து பிரச்சினை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், குறித்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட யோசனை-
வட மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட யோசனை இன்று ஊடகவியலாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில், அதில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கும் வகையிலான தீர்வுத்திட்ட யோசனையொன்று, கடந்த ஏப்ரல் மாதம் வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. குறித்த தீர்வுத்திட்ட யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள், மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில், இன்று, வட மாகாண சபையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, வட மாகாண சபையால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட யோசனையானது, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஊடகவியலாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர், இந்த தீர்வுத்திட்ட யோசனையை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர். அரசாங்கத்தால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில், சமஷ்டி அடிப்படையிலான தீர்வு கிடைக்கவேண்டும் என்றும் மாநில சுயாட்சியை அடிப்படையாகக் கொண்டு, அதிகார பகிர்வுகள் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி, வடமாகாண சபையால் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மடிக்கணனி அன்பளிப்பு-
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க கல்வி மாதாந்த கொடுப்பனவு திட்டத்தில் உள்ள கிளிநொச்சி ST.THERESA’S GIRLS COLLEGE மாணவி அ.குணாலீசா தனது கல்வி நடவடிக்கைக்காக மடிக்கணனி ஒன்று தந்து உதவுமாறு விடுத்த விண்பத்திற்கு அமைவாக அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த சபாநாதன் யோகானந்தா அவர்களால்
19.05.2016 வியாழக்கிழமை அன்று வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின்னூடாக அ.குணாலீசாவுக்கு மடிக்கணனி அன்பளிப்பாக வழங்கபட்டது. மாணவியின் கல்வியில் ஆர்வம் கொண்டு மடிக்கணனி அன்பளிப்பாக வழங்கிய சபாநாதன் யோகானந்தா அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் மனமாந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். (வட்டு. இந்து வாலிபர் சங்கம்)
இலங்கைக்கு துருக்கி அவசர உதவி-
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை துருக்கி செம்பிறை சங்கம் (Turkish Red Crescent) ) வழங்கியுள்ளது. இதன்படி, கூடாரங்கள், பிளங்கட் மற்றும் சோலார் கிட் போன்ற பொருட்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, துருக்கியின் மனிதாபிமான அமைப்பான செம்பிறை சங்கத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. துருக்கியின் இந்த உதவிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நன்றி தெரிவித்துள்ளதோடு, சுனாமியின் பின்னர் துருக்கி செம்பிறை சங்கத்தால் இலங்கையில் 250 வீடுகள் அமைக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். இலங்கை இதனை ஒருபோதும் மறக்காது எனவும் அனுர பிரியதர்ஷன யாப்பா மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கையின் துயரங்களில் துருக்கி பங்குகொள்ளும் என குறிப்பிட்ட இலங்கைக்கான துருக்கித் தூதுவர், முடிந்தளவு விரைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பசில் ராஜபக்சவின் செயலாளர் கைது, லலித் வீரதுங்க ஆஜர்-
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு செயலாளர் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கம்பஹா ஒருதொட்ட காணிக்கு, அரசாங்கத்தின் நிதியை முறைக்கேடான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர், விசாரணைக்காக இன்று செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே அவர், கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளரான லலித் வீரதுங்க, பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவுக்கு சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, வாக்குமூலமளிக்க அங்கு அழைக்கப்பட்டிருந்தார்.
மூன்று அமைச்சுகள் வடக்கு முதல்வர் வசமாகின-
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தான் வகிக்கும் அமைச்சுகளுக்கு மேலதிகமாக, இன்னும் 3 அமைச்சுகளைத் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளார். அந்த மூன்று அமைச்சுகளுக்கான பொறுப்புக்களையும், நேற்று மாலை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வட மாகாண அமைச்சர் வைத்திய கலாநிதி பத்தமநாதன் சத்தியலிங்கத்திடமிருந்த, சமூகசேவைகள், புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகாரம் ஆகிய மூன்று அமைச்சுக்களே முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. வட மாகாண சபையின் அமைச்சரவை தொடர்பில் அண்மைய காலங்களில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் வெளியாகி வந்த நிலையில், எந்தவோர் அமைச்சரும் மாற்றப்படாமல், ஏற்கனவே தன்னிடம் இருந்து சுகாதார அமைச்சருக்கு வழங்கிய மூன்று அமைச்சுக்களையே, முதலமைச்சர், நேற்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். முதலமைச்சர் நிதியம் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டே இந்த அமைச்சுகளை மீளப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.