இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலய பாடசாலை மட்ட மாணவர் பாராளுமன்றம்-2016-(படங்கள் இணைப்பு)
யாழ். இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலய பாடசாலை மட்ட மாணவர் பாராளுமன்றம்-2016 இற்கான கன்னி அமர்வு கடந்த 26.05.2016 வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். ஆரம்ப நிகழ்வாக பிரதம விருந்தினர் வரவேற்பு நிகழ்வினைத் தொடர்ந்து தேசியக் கொடியேற்றல், பாடசாலைக் கொடியேற்றல், இறைவணக்கம், தீப நடனம், தீபமேற்றல், மௌன வணக்கம் என்பன இடம்பெற்றன. தொடர்ந்து ஆசியுரையினை இளவாலை புனித ஹென்றீஸ் கல்லூரியின் பிரதி அதிபர் அருட்பணி பி. ஜோன் றெக்சன் அவர்கள் ஆற்றினார். வரவேற்புரையினை மாணவர் பாராளுமன்ற பிரதமர் செல்வி ஜே. எமறன்சியா ஆற்றியதையடுத்து, தலைமையுரையினை பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி செ.ஜெயநாயகி அவர்கள் ஆற்றினார். தொடர்ந்து நிகழ்வுகளாக சத்தியப் பிரமாணம், செங்கோல், மேலங்கி, கோவைகள் வழங்குதல், உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணமும், பொறுப்புக்கள் கையளித்தலும், பாராளுமன்றம் ஆரம்பித்தல், பிரேரணை முன்வைத்தல் என்பன இடம்பெற்றன. இதனையடுத்து சிறப்புரை, பொறுப்பாசிரியர் உரை என்பன இடம்பெற்றன. தொடர்ந்து கலாசார நிலை அன்றும் இன்றும் என்ற விவாத அரங்கு இடம்பெற்றது. இதனையடுத்து பிரதம அதிதியின் உரை இடம்பெற்று நன்றியுரையைத் தொடர்ந்து நன்றிப் பாடலுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.