வெடிபொருட்கள் அகற்றப்படாமையால் மீள்குடியேற முடியாத நிலை-

mineகிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை பகுதியில் வெடிபொருட்கள் முழுமையாக அகற்றப்படாமையினால் 257 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினாலேயே இவர்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வெடிபொருள் ஆபத்தான பகுதியாக காணப்படும் குறித்த பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு அதிகமாக வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் வெடிபொருள் அகற்றும் பணிகள் நிறைவு பெறாமையினாலும் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினாலும், இத்தாவில், முகமாலை, வடக்கு மற்றும் மேற்கு, வேம்பொடுகேணி ஆகிய பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு விண்ணப்பித்துள்ள 257 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மீள்குடியேற்றத்திற்காக விண்ணப்பித்துள்ள 257 குடும்பங்கள் வெளிமாவட்டத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இராணுவ உயரதிகாரிகளை பிரதிவாதிகளாக பெயரிட எதிர்ப்பு-

prageeth ekneligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கில், இராணுவத் தளபதி மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை, நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடக் கோரி, அவரது மனைவியால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, இராணுவத் தளபதி மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஆகியோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியே இவ்வாறு எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். விடயங்களை ஆராய்ந்த நீதவான் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இதன்படி குறித்த விசாரணையை ஒக்டோபர் 12ம் திகதி மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 293 இலங்கையர்கள் தடுப்பு-

jailகுடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 293 இலங்கையர்கள் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா வீசாவினூடாக சென்று வெளிநாடுகளில் தொழில் புரிந்தமை மற்றும் அங்கு சென்றதன் பின்னர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுகளின்கீழ் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சுற்றுலா வீசாவில் எவரும் வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என அமைச்சர் தலதா அத்துகோரள கூறியுள்ளார். இவ்வாறான செயல்கள் பாரிய அளவில் குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறும் செயற்பாடு எனவும் அவர் கூறியுள்ளார். போலி வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களூடாக சட்டங்கள் மீறப்பட்டு சுற்றுலா வீசாவை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும், இதனால் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 2016 ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உபமுகவர் நிலையங்களை இரத்து செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு கோரி பேரணி-

jljவவுனியா தாண்டிக்குளத்தில் அமைக்கப்படவுள்ள வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு வலியுறுத்தி எதிர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா காமினி வித்தியாலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி மாவட்ட செயலகத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதா மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்கும் பட்சத்தில் அனைத்து பிரதேச மக்களுக்கும் நன்மை ஏற்படக்கூடும் என பேரணியில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வவுனியா மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி தொடர்பான மகஜரும் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.