அமரர் இராமலிங்கம் சின்னத்தம்பி அவர்களின் இறுதிக் கிரியைகள் பற்றிய அறிவித்தல்-
நேற்றையதினம் (02.07.2016) அமரத்துவமடைந்த யாழ் நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை மற்றும் திருநாவற்குளத்தை வாழ்விடங்களாகவும் கொண்டவரும், எமது கழகத்தின் மூத்த உறுப்பினர் தோழர் பாரூக் அவர்களின் அன்புத் தந்தையுமான திரு. இராமலிங்கம் சின்னத்தம்பி அவர்களின் இறுதிக் கிரியைகள் நாளை (04.07.2016) திருநாவற்குளத்தில் இடம்பெறவுள்ளது.
அன்னாரின் பூதவுடல் வவுனியா, திருநாவற்குளம், மூன்றாம் ஒழுங்கையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள் நாளை திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரது பூதவுடல் பத்தினியார் மகிழங்குளம் இந்து மாயனத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படும்.
தொடர்புகட்கு
யோகன் – 0775155393
சண்முகலிங்கம் – 0771654136
800 பேருக்கு வீடுகளை அமைப்பதற்கு யாழில் உதவி-
வீடமைப்பு கடன் திட்டத்தின் கீழ், யாழ் மாவட்டத்தில் 800 பயனாளிகளுக்கான காசோலைகளை தேசிய வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்துள்ளார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், அம் மாவட்ட முகாமையாளர் ரவீந்திரனின் தலைமையில் இன்றுகாலை இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. ´2025ம் ஆண்டு அனைவருக்கும் வீடு´ என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி யாழில் வறுமைக்கோட்டுக் கீழ் உள்ள பயனாளிகள் தமது வீடுகளை அமைப்பதற்கும், பழைய வீடுகளை திருத்துவதற்காகவும், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு சுமார் 800 பேருக்கு 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் வரை வீடமைப்பு கடன் திட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட ரயில் கடவை காப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியா மாவட்ட ரயில் கடவை காப்பாளர்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா மாவட்ட ரயில் கடவை காப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வடபகுதிக்கான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டன் பின்னர் தற்காலிமாக ரயில் கடவை காப்பாளார்களாக தம்மை சேவையில் இணைத்து கொண்டதாகவும், இதுவரை நிரந்த நியமனம் வழங்கவில்லை எனவும், சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்திலுள்ள சுமார் 75 ரயில் கடவை காப்பாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சோதனை நடவடிக்கை-
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என விமான நிலையத்தின் பாதுகாப்புத் தலைமையதிகாரி தம்மிக விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். விமான நிலைய சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு பொருளாதார மத்திய நிலையம்; தொடர்பில் கருத்துக் கணிப்பு-
வடக்கில் பொருளாதார மத்திய நிலையத்தை எந்த இடத்தில் அமைப்பது என்பது தொடர்பில் வட மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்துக்கணிப்பொன்றை நடத்திய பின்னரே, இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையில் சமமான கருத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட சீ.வி. விக்னேஸ்வரன், கருத்துக் கணிப்பொன்றை ஏற்படுத்தி இறுதி முடிவை எடுக்கவுள்ளதாகவும், எதிர்வரும் வாரத்திற்குள் இதற்கான முடிவை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தியும் அதன் பிரகாரம் தாண்டிக்குளத்திலே பொருளாதார மையம் அமையவேண்டும் எனக் கோரியும், வவுனியா மாவட்ட உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் கடந்த 27 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை, வடமாகாண பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்கு முதலமைச்சர் முன்வைத்துள்ள யோசனைக்கு அமைவாக, முதலமைச்சரின் கரங்களை பலப்படுத்துவோம் என தெரிவித்து வவுனியாவில் விவசாயிகளினால் கடந்த 28ஆம் திகதி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையிலே வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சிவகச்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சபை அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.