பிரான்ஸின் நீஸ் நகர தாக்குதலில் 84 பேர் உயிரிழப்பு-(படங்கள் இணைப்பு)
பிரான்ஸின் தென்பகுதி நகரான நீஸ் நகரில், பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களின் போது குழுமியிருந்த கூட்டத்தினரின் மீது லாரி ஒன்று தாறுமாறாக மோதித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கூறியுள்ளார். மேலும், 18 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து இந்தத் தாக்குதலை “பயங்கரவாதத் தாக்குதல்” என வர்ணித்துள்ளார். “ப்ரோமனேட் தேஸாங்கிலே” என்றழைக்கப்படும் நிகழ்வில் வாண வேடிக்கைகளுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பிரான்ஸின் தேசிய தினமான பாஸ்டில் தினத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. லாரியின் டிரைவர் சுமார் 2 கிமீ தூரம் பெரும் கூட்டத்துக்குள் லாரியை ஓட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநர் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் லாரிக்குள் இருந்ததாக கூறப்படுகின்றது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தக்குழுவும் பொறுப்பேற்கவில்லை. பிரான்ஸில் ஏற்கனவே அமுலில் உள்ள அவசரநிலை மேலும் மூன்றுமாத காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதேவேளை பிரான்ஸில் நேற்று இடம்பெற்ற கனரக வாகனத் தாக்குதலில், இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.