மருத்துவ மற்றும் சித்த பீடங்கள் நாளை ஆரம்பம்-

jaffna university managementயாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் சித்த மருத்துவ பீடங்களின் மாணவர்களுக்காக விரிவுரைகள் நாளை 20ஆம் திகதி ஆரம்பிக்கபடவுள்ளதோடு, விவசாய பீடத்தின் பரீட்சைகளும் இடம்பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி சிங்கள மற்றும் தமிழ் மாணவக் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் காலவரையின்றி இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே, துணைவேந்தர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில், மோதல் சம்பவம் அனைவரையும் மனவருத்ததுக்கு உட்படுத்தியுள்ளது. சம்பவம் ஏற்பட்டு ஒரு மணிநேரத்துக்குள் நிலைமை கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தும் பாதுகாப்பிற்காக பல்கலைக்கழக அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தபட்டிருந்தன. இது மாணவர்கள் மத்தியில் இடம்பெற்ற ஒரு மோதல் ஆகும். கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து மூவின மாணவர்களும் பாதுகாப்புடனும் எவ்வித பிரச்சினையும் இன்றி கல்விச் செயற்பாட்டை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பல்கலைக்ழக மாணவ ஒன்றிய தலைவர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கூட்டம் உடனடியாக இடம்பெற்றது. இதில் இனிமேல் இப்படி ஒரு சம்பவம் இடம்பெறாமல் இருக்க தாம் பொறுப்பு எனவும் கல்வி செய்றபாடுகளை ஆரம்பிக்க முழு ஒத்துழைப்பு தருவதாகவும் மாணவ ஒன்றியத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இங்கு நிலைமை சுமுகமாக இருந்தாலும் வெளிமாவட்ட மாணவர்களுக்கு பாதுகாப்பையும் நம்பகத் தன்மையான கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பது எமது கடப்பாடாகும். எனவே, அதற்கான நடவடிக்கையினை நாம் ஆரம்பித்துள்ளோம். அந்தவகையில் நாளை புதன்கிழமை மருத்துவ பீடம் மற்றும் சித்த மருத்துவ மாணவர்கள் தமது விரிவுரைகளை ஆரம்பிப்பதற்கும் விவசாய பீட பரீட்சைகளை நடத்துவதற்கும் நாம் தீர்மானித்துள்ளளோம். ஏனைய பீடங்களின் கல்வி செயற்பாடுகள் அனைத்தும் மாணவர்களின் பாதுகாப்பில் நம்பகத்தன்மை ஏற்படுத்தப்பட்டு விரைவில் ஆரம்பிக்கப்படும்’ என்றார். இந்தச் சந்திப்பில் யாழ். பல்கலைக்ழக விஞ்ஞான பீட பீடாதிபதி ஆர்.விக்னேஷ்வரன், மருத்துவபீட பீடாதிபதி ஆர்.சுவேந்திரகுமார் மற்றும் முகாமைத்துவ பீட பீடாதிபதி வேல்நம்பி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் வரவேற்பு நிகழ்வில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, சிங்கள அதிகாரி ஒருவர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். “யாழ். பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் உயர் பதவிவகிக்கும் சிங்கள அதிகாரி ஒருவர் இந்தக் குழுவின் தலைவராக இருப்பார். ஏனைய இருவரும் யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழர்களாவர். இந்தக் குழுவினர் நடத்தும் விசாரணைகளுக்கு அமைய மோதல்களைத் தூண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

நாளை முதல் படிப்படியாக பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும். நாளை மருத்துவ பீடத்தின் சித்தமருத்துவ பிரிவின் பயிற்சிகளும், விஞ்ஞானபீடம் மற்றும் மருத்துவ பீடங்களின் பரீட்சைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மாணவர்கள் தயக்கமின்றி கல்விச் செயற்பாடுகளில் வந்து பங்கேற்கலாம். ஊடகங்களில் வெளியாகும் சில செய்திகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. இவ்வாறானதொரு சம்பவம் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் உறுதிமொழி அளித்துள்ளனர். இரு மாணவக் குழுக்களுக்கிடையில் இடம்பெற்றது சிறியதொரு சம்பவம். இதனை இனரீதியான மோதலாக சித்தரிப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. இதுபோன்ற சிறிய சம்பவங்கள் கடந்த காலத்திலும் இடம்பெற்றுள்ளன. சம்பவ தினத்தன்று ஒரு மணித்தியாலத்துக்குள் நிலைமையை சுமுகமாக்க முடிந்தது. இருந்தபோதும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உடமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே தற்காலிகமாக பல்கலைக்கழகத்தை மூட தீர்மானித்திருந்தோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.