வட்டுக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்ற 27ஆவது வீரமக்கள் தினம்-(படங்கள் இணைப்பு)-
யாழ். வட்டுக்கோட்டை வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலய பொது அரங்கில் 27ஆவது வீரமக்கள் தினம் திரு.வி.துரைசிங்கம் அவர்களது தலைமையில் 16.07.2016 சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. வணக்கத்துக்குரிய அன்டனி அடிகளாரின் ஆசியுரையுடன் இந்நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் துணைத்தலைவர் சி.க. சிற்றம்பலம், புளொட்டின் நோர்வே கிளையின் அமைப்பாளர் ராஜன், முன்னாள் மானிப்பாய் பிரதேச சபைத் உறுப்பினர் கௌரிகாந்தன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு, பல கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வின் இறுதியில் சுழிபுரம் பகுதியிலுள்ள கல்விளான் காந்திஜீ சனசமூக நிலைய முன்பள்ளிச் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதோடு, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியிலிருந்து சுழிபுரம் பெரியபுலோ விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.