கடத்தலுக்கும் கடல் பாதுகாப்பு துறையினருக்கும் தொடர்பு இருக்கிறதா?- வடமாகாணமுதலமைச்சர்

vikiகடத்தலுக்கும் எமது எல்லைப்புற கடல் பாதுகாப்பு துறையினருக்கும் இடையில் ஒற்றுமைகள், உடன்பாடுகள் இருக்கின்றனவா? என்பதுடன், அரசியல்வாதிகளுக்கும் சம்பந்தம் இருக்கின்றதா? என்பது பற்றியும் ஆராயப்பட வேண்டியிருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

மாகாண மட்டத்திலான பொலிஸ் பொது மக்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.பொலிஸ் சேவை என்பது முன்னைய நிலையில் இருந்து விலகிப்புதிய பரிமாணம் பெற்று அது பொது மக்களுடன் பின்னிப்பிணைந்த ஒரு சேவையாக மாற்றப்பட்டிருப்பது ஒரு முன்னேற்றமான செயற்பாடு.

இதுவரை காலமும் பயங்கரவாத மனநோக்குடன் தான் பொலிஸ் சேவை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இயங்கியது. போர்க் காலத்திலிருந்து சமாதான காலத்திற்குத் திரும்பியுள்ளோம் என்ற உணர்வு இப்பொழுதுதான் சிறிது சிறிதாகப் பரவத் தொடங்கியுள்ளது.

எமது நாட்டின் பாதுகாப்புப் பகுதியின் மறுசீரமைப்பு இன்று முக்கியமான ஒன்றாக உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் கருதப்படுகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

இப் பகுதியில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் குற்றச் செயல்கள் மிக அதிகரித்திருப்பது எம்மையும் பொலிஸ் சேவையையும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

களவு, கொலை, கற்பழிப்பு, சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகக் காண்கின்றோம். அது மட்டுமல்ல வடமாகாணம் கஞ்சா விற்பனையின் மத்திய நிலையமாக மாறியிருப்பதும் மிகவும் வெறுப்பையும் வேதனையையும் தருகின்றன.

பொலிஸார் பல கடத்தற் செயற்பாடுகளை முறியடிக்கின்ற போதும் இச் செயற்பாடுகள் தொடர்கின்றன என்றால் இதன் பின்னணி என்ன? கடத்தலுக்கும் எமது எல்லைப்புற கடல் காவல் துறையினருக்கும் இடையில் ஏதாவது ஒற்றுமைகள், உடன்பாடுகள் இருக்கின்றனவா என்பது பற்றி எல்லாம் ஆராயப்பட வேண்டியுள்ளது என்றார்.