Posted by plotenewseditor on 5 September 2016
Posted in செய்திகள்
சட்டத்தரணிக்கு எதிரான பிடியாணையை இடைநிறுத்த நீதிபதி இளஞ்செழியன் மறுப்பு-
சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்திக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, யாழ் மேல் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நீதிபதி இளஞ்செழியன் நிராகரித்துள்ளார். அத்துடன், அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அவர் தள்ளுபடி செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்குப் பணிந்து முதலில் அதனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். மல்லாகம் நீதிமன்றப் பதிவாளரை தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியாக செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றையடுத்து, சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக தெல்லிப்பழை பொலிசாரினால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி கடந்த 2ம் திகதி அந்த சட்டத்தரணிக்கு எதிராக மல்லாகம் நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்தப் பிடியாணையை இடைநிறுத்தி வைப்பதற்கு கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, சந்தேகநபரான சட்டத்தரணி ஊடாக யாழ் மேல்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுவைப் பரிசீலனை செய்த நீதிபதி இளஞ்செழியன் அது தொடர்பாக செய்யப்பட்ட சமர்ப்பணத்தை நிராகரித்து, மனுவை தள்ளுபடி செய்தார். அத்துடன் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு முதலில் பணிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை விடுத்துள்ளார்.
மலேசியாவிற்கான இலங்கைத் உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமை தொடர்பில் கண்டனம்-
மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சர்மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் கண்டனம் வெளியிட்டு, மலேஷிய உயர்ஸ்தானிகருக்கு இலங்கை வெளிவிவகார செயலாளர் சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரியவருகின்றது. மாநாடு ஒன்றுக்காக மலேஷியா சென்றிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்த நாட்டிலுள்ள தமிழர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்றையதினம் மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சர் மீது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை மலேஷியாவிலுள்ள தமிழ் டயஸ்போரா குழுவினருக்கு எதிராக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்றுகாலை அரை மணிநேரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, விமான நிலைய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மலேஷியாவில் இருந்து நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்க சென்ற குழுவினரே இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள மலேஷியாவுக்கு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்த நாட்டிலுள்ள தமிழர்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றையதினம் மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அந்த நாட்டு விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இலங்கைத் தூதுவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் செய்திகளை வாசிக்க… Read more