நாங்கள் தான் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கினோம். தற்போது நாங்கள் இணைந்து ஆட்சியமைத்துள்ளோம். எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு ஒன்றாக பயணிப்போம். அடுத்த தேர்தலின் பின்னர் என்ன செய்வது என்று அப்போது தீர்மானிப்போம் என்று அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
தனித்து போட்டியிடுவோம். இணைந்து ஆட்சியமைப்போம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்
கடந்த வாரமும் இவ்வாரமும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மிகவும் முக்கியமானவையாகும். சுதந்திரக் கட்சி தனது சம்மேளனத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை குருணாகலில் வெற்றிகரமாக நடத்தியது.
ஐக்கிய தேசிய கட்சி தனது 70 ஆவது சம்மேளனத்தை எதிர்வரும் சனிக்கழமை கொழும்பில் நடத்தவுள்ளது. இரண்டு கட்சிகளும் இணக்க அரசியல் விடயத்தில் மிகவும் வலுவாக இருக்கின்றன. ஐந்து வருடங்களுக்கு நாங்கள் இணைந்து பயணி்ப்போம்.
கேள்வி சுதந்திரக் கட்சியே அதிகளவு மக்களை திரட்டியதாக ஜனாதிபதி கூறியுள்ளாரே?
பதில் சனிக்கிழமை எமது கூட்டத்தை வந்து பாருங்கள்.
கேள்வி அடுத்த தேர்தலில் தனித்து ஆட்சியமைப்போம் என்று ஜனாதிபதி கூறியுள்ளாரே?
பதில் எதிர்வரும் ஐந்துவருடங்களுக்கு இணைந்து பயணிப்போம். அடுத்த தேர்தலின் பின்னர் எவ்வாறு ஆட்சியமைப்பது என்று தீர்மானிப்போம்.
கேள்வி மைத்திரிபாலவை ஐக்கிய தேசிய கட்சியே ஜனாதிபதியாக்கியது. ஆனால் அவர் தற்போது சுதந்திரக் கட்சி ஆட்சியை அமைப்பதாக கூறுகிறார். என்ன நடக்கின்றது?
பதில் ஆம். நாங்கள் தான் அவரை ஜனாதிபதியாக்கினோம். தற்போது நாங்கள் ஆட்சியமைத்துள்ளோம். எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு ஒன்றாக பயணிப்போம். அடுத்த தேர்தலின் பின்னர் என்ன செய்வது என்று பின்னர் தீர்மானிப்போம்.
கேள்வி சுதந்திரக் கட்சி ஆட்சிமைப்பது என்றால் ஐக்கிய தேசிய கட்சியை எதிர்க்கட்சிக்கு தள்ளுவது என்றுதானே அர்த்தம்?
பதில் தனித்து போட்டியிடுவோம். இணைந்து ஆட்சியமைப்போம்.
கேள்வி முரண்பாடுகள் எழுவதாக தெரிகின்றதே?
பதில் அவ்வாறு எதுவும் இல்லை. நான்கு வருடங்களுக்கு பயணிப்போம்.