சில்லாலை வட மத்தி கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொதுக்கூட்டமும் மாணவர்களுக்கான கௌரவிப்பும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளு மன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆற்றிய உரை,
எமது மக்கள் சுமார் 80 சதவீதமளவிற்கு மேல் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் ஒரு மாற்றத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்துள்ளார்கள். ஆனால், மாற்றம் ஏற்படவில்லை. அத்தகைய சூழலில் மிக மெதுவாகவே ஓரு சில நடவடிக்கைகள் நகர்ந்துகொண்டு செல்கின்றது.
குறிப்பாக காணிவிடுவிப்பு, சிறைச்சாலையில் உள்ள தமிழ் இளைஞர்களின் விடுவிப்பு, காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்கள் மற்றும் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் மெதுவாகவே நடவடிக்கைகள் நகர்ந்து வருகிறது. இவை தொடர்பில் துரிதப்படுத்த வேண்டும். மக்களின் வாழ்க்கை நிலைகள் மீண்டும் சகஜமான நிலைக்கு அல்லது முன்னேற்றமான நிலைக்கு வரவேண்டும் என்ற நிலைப்பாடு இருந்து கொண்டிருக்கின்றது.
போராட்டம் என்ன காரணத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த அடிப்படைக் காரணங்கள் தீர்க்கப்படாமல் நியாயமான அரசியல் தீர்வு ஓன்றை பெற்றுக்கொள்ளாமல் எங்களுடைய முழுமையான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வது கடினம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எங்களுடைய பகுதிகளில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ளக்கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வொன்று வழங்கப்பட்டு அத்தீர்வு சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் தான் எங்களுடைய மக்களுடைய வாழ்க்கை முன்னேற்றம் அடையும்.
மாகாண சபை இருக்கிறது. அதனால் ஓன்றும் கிடைக்கவில்லை என நினைக்கலாம். ஆனால், மாகாணசபைக்கு குறிப்பிட்ட அளவுதான் நிதி கிடைக்கிறது. அதுவும் எதற்காக செலவு செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் அவை கிடைக்கிறது. மிக சொற்பமான நிதியை வைத்துக்கொண்டுதான் சில விடயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதேநேரத்தில், மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றது. முதலமைச்சராக சி.வி.விக்கினேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வாறு நியமிக்கப்பட்டும் மாகாணசபைக்குள் பல குழப்பங்கள் காணப்படுகின்றன. சபை அமர்வுகள் கூட ஆக்கபூர்வமாக நடைபெறுவதில்லை என்பதை பத்திரிகையூடாக பார்க்கின்றீர்கள். இத்தகைய நிலைமைகள் ஆரோக்கியமான சூழ்நிலைகள் அல்ல.
நாங்கள் அழிவிலிருந்து மீள முயற்சித்துக்கொண்டிருக்கின்ற இனம். அத்தகைய ஒரு இனத்தினைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்பதை நடைபெற்று நிறைவடைந்த தேர்தல் பெறுபேறுகளின் ஊடாக மக்கள் தெளிவாக காட்டியுள்ளார்கள்.
அவ்வாறிருக்கையில், தற்போது கட்சிகள், தலைமைகள், ஒற்றுமையாகவும் அங்கத்தவர்கள் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம்தான் எங்களுடைய மக்களுடைய வாழ்க்கையை வாழ்க்கைத் தரங்களை உயர்த்த முடியும். எமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ளமுடியும். இதன் முலம் தான் எமக்கு அடுத்துவரும் சந்ததிகள் வளமான வாழ்வை வாழ்வதற்கான சிறப்பான எதிர்காலம் உருவாகும்.
பூரணமான விடுதலை எதுவெனக் கூறுவதாகவிருந்தால் முதலாவதாக தேசிய விடுதலை. மற்றையது மக்களுடைய வாழ்க்கைத்தரங்கள் உயரவேண்டும். இவை இரண்டிலும் நாங்கள் பின் தள்ளித்தான் தற்போதும் இருக்கின்றோம். இவற்றை முன்னோக்கிச் செல்வதற்கு மக்களுடைய அழுத்தம் கட்டாயம் இருத்தல் வேண்டும்.
அரசியலமைப்பு மாற்றம்
தற்போதைய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் நீண்டகாலமாக பேசப்பட்டு வந்தாலும் தற்போதுள்ள புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் நிச்சயமாக அரசியலமைப்பு மாற்றம் வரும். அதில் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வுவரும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் மிக நம்பிக்கையுடன் 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு வந்து விடும் என்று பல தடவை கூறிவருகின்றார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அதற்கான உந்துதல்களை பல வழிகளில் செய்து வருகின்றது.
அரசியலமைப்பு மாற்றத்திற்கு ஒரு தேசிய பேரவை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு வழிநடத்தல் குழு ஒன்றும் உள்ளது. இந்த வழிநடத்தல் குழுவிற்கு தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார். வழிநடத்தல் குழுவுக்கு அடுத்ததாக மூன்று முக்கிய குழுக்கள் காணப்படுகின்றன. தேர்தல் முறை மாற்றம், ஜனாதிபதி அதிகாரங்களை குறைப்பது, மற்றையது தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு ஆகிய விடயங்களை ஆராய்வதற்கா கவே அக்குழுக்கள் காணப்படுகின்றன.
தேர்தல் முறை மாற்றம்
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நீண்ட உரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் சில இணக்கப்பாடுகள் வந்தபோதும் அமைச்சர்களான மனோ கணேசன் மற்றம் ஹக்கீம் போன்றவர்கள் தங்களுடைய பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைக்கப்படும் என்ற காரணத்தால் சில விடயங்களை எதிர்த்துள்ளார்கள்.
தேர்தல் முறைமை தொடர்பாக தற்போதைய இணக்கப்பாட்டில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களை 240 பேராக அதிகரிப்பதென்றும் அதில் 60 சதவீதமான பிரதிநிதிகள் நேரடியாக தேர்தல் மூலம் தொகுதி வாரியாக தெரிவு செய்யப்படுவார்கள். அடுத்து 40 சதவீதமான பிரதிநிதிகள் விகிதாசார தேர்தல் முறை மூலமாக தெரிவு செய்யப்படுவார்கள். இவ்வாறான தெரிவுகளில் தொகுதிகள் அதிகமாக வருகின்றபோது வடக்கு, கிழக்கில் பிரச்சினை ஏற்படாது. ஆனால் வடக்கு, கிழக்கிற்கு வெளியே பரவிவாழும் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் போன்றவர்களுக்கு பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும். அவர்களுக்கான தொகுதி நிர்ணயிப்பது மிக கடினமானது. ஒரு தொகுதியைக் கூட நிலையாக வைக்க முடியாது. இத்தகைய பிரச்சினைகளால் தான் அந்த இரண்டு அமைச்சர்களும் வடகிழக்கிற்கு வெளியேவாழும் தமிழ் பேசும் மக்களுக்கான பிரதிநிதித்துவங்களுக்காக கடுமையாக எதிர்க்கின்றார்கள்.
இத்தகைய விடயங்களில் இணக்கம் காணப்படாத நிலையில் முக்கியமாக எமது விடயங்கள் தொடர்பில் ஆராய முற்படுகின்ற போது வேகமாக முன்னெடுக்க முடியாத நிலைமை உருவாகின்றது. எனினும் அதுதொடர்பில் விரைவில் ஒரு இணக்கப்பாட்டு ரீதியான தீர்மானமொன்றை எடுப்பதற்குரிய நிலைமைகள் பேச்சுவார்த்தைகளின் ஊடாக எடுக்கப்படும் என்ற அதீத நம்பிக்கை உள்ளது.
சமஷ்டிக்கான அவசியம்
அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உரையில், ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் ஒற்றுமைக்கு வந்திருக்கின்றன. ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்பதை தெளிவாக கூறியுள்ளார். எம்மைப் பொறுத்தவரை ஒற்றையாட்சிக்குள் நியாயமான தீர்வு வர முடியாது. தீர்வு வந்தாலும் ஒற்றையாட்சி முறைமையிலே முழுமையான அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்குத்தான் உள்ளது.
இது தான் மாகாண சபை முறைமைக்கும் நடந்தது. மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பின்கதவால் வந்து அதிகாரங்களை பிடுங்குவார்கள். ஆகவே தான் அதனை ஏற்க முடியாது என நாம் உறுதியாக கூறுவதோடு சமஷ்டியைப் பற்றி கதைக்கின்றோம். அவ்வாறிருக்கையில் சமஷ்டி என்பது பிரிவினைக்குரியது என்று கூறுவதை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. அது வெறுமனே அரசியலுக்கான பிரசாரமாகவே கொள்ளவேண்டியிருக்கின்றது.
அழுத்தங்கள் தொடரும்
வழி நடத்தும் குழுவின் கீழ் ஏழு உபகுழுக்கள் உள்ளன. அதில் ஒரு குழுவிற்கு நான் தலைவராக இருந்து வருகின்றேன். அதிலே என்னுடைய குழு மத்திக்கும் மாகாணம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் போன்றவற்றுக்கான அதிகாரங்கள், அவை எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பது தொடர்பாக ஆராய்கின்றது. வழிநடத்தும் குழு விவாதத்தின் பின்னரே பாராளுமன்றத்திற்கு இவ்விடயம் கொண்டுவரப்படும். அந்தச் செயற்பாடு எப்போதென்பதே கேள்விக் குறியாகவுள்ளது. இருப்பினும் நாம் அதற்குரிய பிரயோக ரீதியான முயற்சிகளை படிப்படியாக மேற்கொண்டு வருகின்றோம்.
தற்போதைய நிலையில் இந்த வருடம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கும் செயற்பாடு நிறைவு பெறாது, அடுத்த வருடம் தான் அதில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் பிரதர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இந்த வருடம் நிறைவடைவதற்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. அந்நிலையில் அடுத்தவருடத்திற்கான வரவு–செலவுத் திட்டம் தயார்படுத்த வேண்டியுள்ளது. ஆகவே, இக்காலப்பகுதியில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பில் ஆராய்வதற்கான பொருத்தமான காலமாக இருக்காது எனக்கருதி தான் அவர் அவ்வாறு கூறுகின்றார் என நினைக்கின்றேன்.
எவ்வாறாயினும் தேசிய இனப்பிரச்சினைக்கான விடயத்தில் அனைத்துக் கட்சிகளுடைய ஒற்றுமைப்பாட்டையும் பெறவேண்டியுள்ளது. இக்கடினமான விடயத்தை நிறைவேற்றியேயாக வேண்டும். அதற்காக நாம் உரிய உந்துதல்களை முறையாக மேற்கொள்வோம். அதிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை.
இக்கட்டான சூழல்
தற்போதைய சூழல் இக்கட்டான நிலையில் தான் உள்ளது. மிக கவனமாக பக்குவமாக காரியங்களை நகர்த்தாவிட்டால் அனைத்தும் தவறாகிவிடும். மீண்டுமொரு அழிவுப்பாதைக்கு மக்களை கொண்டு போகக்கூடாது. அதனைச் செய்யவும் மாட்டோம். அதில் நாம் தெளிவாக விருக்கின்றோம். இவ்விடயத்தில் நாங்கள் கவனமாக இருக்கவேண்டும். சில விடயங்களில் விட்டுக்கொடுப்புகள் இடம்பெற்றுள்ளன. சில விடயங்கள் எமக்குத் தெரியாமலே நடைபெறுகின்றன. நாமும் பொறுமையுடன் இருக்கின்றோம். அதனால் எம்மை மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று கருதக்கூடாது.
நாங்கள் நிச்சயமாக அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டியுள்ளது அண்மையிலே ஐ.நா செயலாளர் பான் கீ மூன் வருகை தந்த போது பல விடயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறியுள்ளோம். எங்களுக்கு ஒரு நியாயமான தீர்வு வழங்கப்படாது விட்டால் எங்களுடைய பகுதிகளில் இந்த அரசாங்கங்களை செயற்பட அனுமதிக்க மாட்டோம் என்பதை ஐ.நா.செயலாளரிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியுள்ளார்.
நாங்கள் பல முயற்சிகளை எடுப்போம். எமது விடயத்தில் சர்வதேச தலையீடு இருக்கிறது. அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் எவ்வளவு துரம் அழுத்தம் பிரயோகிப்பார்கள் என்பதைப் பற்றிச் சிந்திக்கவேண்டியுள்ளது. சர்வதேசத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளுக்காக அரசாங்கத்திற்கு தான் ஆதரவு வழங்குவார்கள்.
தமக்குச் சார்பான அரசாங்கம் கவிழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே எங்கள் விடயத்தில் அக்கறை காட்டுகிறார்களே தவிர, எங்களுக்காக அவர்கள் அக்கறை கொள்ளவில்லை. இவ்விடயங்களை மனதில் கொண்டு பல விடயங்களை சாணக்கியமான முறையில் கையாள வேண்டியுள்ளது.
பாரிய மக்கள் எழுச்சி
மீண்டுமொரு அழிவை சந்திக்க முடியாது. நடந்து முடிந்தவையே போதும். ஒரு ஜனநாயக முறையில் நியாயமான வகையில் நாங்களே எங்கள் பகுதியில் உள்ள விடயங்களை கையாளக் கூடிய தீர்வை வென்றெடுக்க வேண்டும். அதற்கு நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பல கருத்துக்கள் இருந்தாலும் அந்த விடயத்தில் ஒற்றுமை உள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி பெரும் பேரணி நடைபெறவுள்ளது. இது தமிழ் மக்கள் பேரவை, இலங்கை தழிழரசு கட்சியில் உள்ள ஒரு சிலர், ஏனைய கட்சிகள் இணைந்து கொண்ட பாரிய மக்கள் எழுச்சியாக வரவேண்டும் என்பதே எனது நீண்டகால எண்ணமாக உள்ளது.
இது தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைவருக்கும் தெளிவு படுத்திக் கூறியுள்ளேன். இப்படியான அழுத்தங்கள் கொடுப்பதன் மூலம் தான் அரசாங்கத்தினை சிந்திக்கச் செய்ய முடியும். தமிழ் மக்களுடைய கோரிக்கையை எற்றுக்கொள்ள வைக்க முடியும். அதே நேரம் இந்த அரசாங்கம் மெதுவாகவே பயணம் செய்கிறது. இருப்பினும் தீர்வு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு எமது விடயங்களை கவனமாக கையாள்வோம். அதற்கான பாதையில் பயணிப்போம்.
(நன்றி: வீரகேசரி 13.09.2016) தொகுப்பு எம்.நியூட்டன்-