d-sithadthan-m-pதமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 24ஆம் திகதி நடத்தவுள்ள பேரணி பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டுமெனத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இதில் அனைத்து தமிழ் மக்களுகம் பங்கெடுக்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்,

தமிழ் மக்கள் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர். இத்தருணத்தில் மிகக் கவனமாக, பக்குவமாக காரியங்களை செய்யாவிட்டால் அனைத்தும் தவறாகிவிடும். மீண்டும் அழிவுப் பாதைக்கு மக்களை கொண்டு போகக்கூடாது. அதனைச் செய்யவும் மாட்டோம். அதில் நாம் தெளிவாகவிருக்கின்றோம். தமிழ் மக்கள் விடயத்தில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். சில விடயங்களில் விட்டுக்கொடுப்புகள் இடம்பெற்றுள்ளன. சில விடயங்கள் எமக்குத் தெரியாமலே நடைபெறுகின்றன. நாமும் பொறுமையுடன் இருக்கின்றோம். அதனால் எம்மை மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று கருதக்கூடாது. நாங்கள் நிச்சயமாக அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டியுள்ளது. அண்மையிலே ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வருகைதந்தபோது பல விடயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறியுள்ளோம். எங்களுக்கு ஒரு நியாயமான தீர்வு வழங்கப்படாது விட்டால் எங்களுடைய பகுதிகளில் இந்த அரசாங்கங்களைச் செயற்பட அனுமதிக்க மாட்டோம் என்பதை ஐ.நா செயலாளரிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியுள்ளார்.

நாங்கள் பல முயற்சிகளை எடுப்போம். எமது விடயத்தில் சர்வதேச தலையீடு இருக்கிறது. அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? எவ்வளவு தூரம் அழுத்தம் பிரயோகிப்பார்கள்? என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. சர்வதேசத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளுக்காக அரசாங்கத்திற்குத் தான் ஆதரவு வழங்குவார்கள்.
தமக்குச் சார்பான அரசாங்கம் கவிழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே எங்கள் விடயத்தில் அக்கறை காட்டுகிறார்களே தவிர, எங்களுக்காக அவர்கள் அக்கறை கொள்ளவில்லை. இவ்விடயங்களை மனதில் கொண்டு பல விடயங்களைச் சாணக்கியமான முறையில் கையாள வேண்டியுள்ளது.

ஒரு ஜனநாயக முறையில், நியாயமான வகையில் நாங்களே எங்கள் பகுதிகளில் உள்ள விடயங்களைக் கையாளக்கூடிய தீர்வை வென்றெடுக்க வேண்டும். அதற்கு நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பல கருத்துக்கள் இருந்தாலும் அந்த விடயத்தில் ஒற்றுமை உள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி பெரும் பேரணி நடைபெறவுள்ளது. இது தமிழ் மக்கள் பேரவை, இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள ஒரு சிலர், ஏனைய கட்சிகள் இணைந்து கொண்ட பாரிய மக்கள் எழுச்சியாக வரவேண்டும் என்பதே எனது நீண்டகால எண்ணமாக உள்ளது.

இது தொடர்ப்பல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் தெளிவுபடுத்திக் கூறியுள்ளேன். இப்படியான அழுத்தங்கள் கொடுப்பதன்மூலம்தான் அரசாங்கத்தினை சிந்திக்கச் செய்ய முடியும். தமிழ் மக்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வைக்க முடியும் என்றார். (ரொஷான் நாகலிங்கம்) – நன்றி: தினக்குரல் 14.09.2016