arpattamகிழக்கு மாகாண சபையால் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் அம்பாறை மாவட்டப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அம்பாறை மாவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

அம்பாறை மகாவாபி விகாரையில் ஒன்றுகூடிய பட்டதாரிகள், அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுரம்வரை பேரணியாகச் சென்றனர். பின்னர் அங்கு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, ரீகல் சந்திவரை பேரணியாகச் சென்று மீண்டும் மணிக்கூட்டுக் கோபுரத்தை வந்தடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க வீதியை மறித்து பட்டதாரிகள் எதிர்ப்பை வெளிக்காட்டியதை அடுத்து, பொதுமக்களின் போக்குவரத்துக்கான மாற்றுவழியை பொலிஸார் ஏற்படுத்திக் கொடுத்தனர். ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மஞ்சுள பெர்ணான்டோ, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளுடன் கலந்துரையாடினார். இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட மாகாண சபை உறுப்பினர், எதிர்வரும் 21ஆம் திகதி பட்டதாரிகளுடனான சந்திப்பை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.