sfdவட மாகாணத்தில் கடமையாற்றும் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த அரச ஊழியர்களது இடமாற்றம் இதுவரை காலமாக முன்னெடுக்கப்படாமையைக் கண்டித்து வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் இன்றுகாலை 9மணியளவில் கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாணசபைகள் பிரிக்கப்பட்டபோது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 105 அரச ஊழியர்கள் வடமாகாணத்தில் கடமை புரிவதற்காக பணிக்கப்பட்ட நிலையில் 5 வருடகாலத்திற்கும் அதிக காலம் தாம் வடமாகாணத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில் பணிபுரிந்து வருவதாக இவர்கள் தெரிவித்தனர். சேவை மூப்பின் அடிப்படையில் வருடாவருடம் தமக்கான இடமாற்றத்தினை அரசு பெற்றுத்தருவதாக தெரிவித்தபோதிலும் இதுவரைகாலமும் தம்மில் 30பேருக்கே இடமாற்றங்கள் பெற்றுத்தரப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பல பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மாற்றுத் தீர்வுகள் இன்றி அரச கடமைகளை நிறைவேற்றி வருகின்ற குறித்த ஊழியர்களின் சேவையை கருத்தில் கொண்டு தமக்கான இடமாற்றத்தினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டதுடன் குறித்த விடயத்திற்கான தீர்வினைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை தாம் எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.