granadeயாழ்ப்பாணம், பிறவுண் வீதி நான்காம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள களஞ்சிய நிலையமொன்றின் காணியில் இருந்து கைக்குண்டுகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்றுகாலை குறித்த களஞ்சியசாலை பகுதியின் காணியில் அங்கிருந்த நாயொன்று நிலத்தில் குழி தோண்டியுள்ளது. இதன்போது மண்ணினுள் புதையுண்ட நிலையில் கைக்குண்டுகள் தென்பட்டதை அவதானித்த களஞ்சிய பொறுப்பாளர், இது தொடர்பாக உடனடியாக யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கண்டபோது குறித்த பகுதியில் நாய் குழி தோண்டிய இடங்களில் மேலும் இரு கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்திருந்தனர். இதனையடுத்து இப்பகுதியில் மேலும் கைக்குண்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் மேலதிக தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரது குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினருக்கு தெரியப்படுத்தியிருந்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்திருந்தனர். கடந்த யுத்த காலத்தின்போது குறித்த பகுதியில் புலிகள் இயக்க முகாம் இருந்ததாகவும் பின்னர் அங்கு இராணுவ முகாம் ஒன்று இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.