xcமத்திய அரசாங்கம் சம உரிமை கொடுத்து, வட மாகாண சபையுடன் பேசி எமக்கு இருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வைத்தர முன்வந்தால் தான், எங்களால் நாட்டில் சம உரிமையுடன் ஒருமித்து வாழ முடியும், என, இலங்கைக்கான சுவீஸ் உயர்ஸ்தானிகர் சுமோட்டா சோமூகவிடம் தாம் தெரிவித்துள்ளதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், கூறியுள்ளார்.

அவ்வாறு இல்லை எனின் நல்லிணக்கத்தினை கொண்டுவருவது மிக கடினம் என தான் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுமோட்டாவுடனான சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே வடமாகாண முதலமைச்சர், மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.இரண்டு நாள் விஐயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சுவிஸ் உயர்ஸ்தானிகர் தலைமையிலான எண்மர் அடங்கிய குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இவர்கள் யாழ். கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று அங்கு வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், வட மாகாண சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற் திட்டங்கள், சுவீஸ் அரசாங்கத்தினால் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் குறித்த குழுவினர் வடமாகாண முதலமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டனர்.