sssஎங்களுக்கு சம்பள உயர்வை வழங்காது இழுத்தடிக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்வரும் காலத்தில் நல்ல பாடம் புகட்டுவோம் என்று, லிந்துலை நகரை சுற்றி வலைத்த எட்டுக்கும் மேற்பட்ட தோட்ட பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

இன்றுகாலை இடம்பெற்ற இப் போராட்டத்தில் முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் இராஜாதுரையின் உருவ பொம்மை ஒன்றுக்கு பாதணி மாலையிட்டு தொழிலாளர்கள் தூக்கிவந்து எரியூட்டினர்.
தோட்ட தொழிலாளர்களை முதலாளிமார் சம்மேளனம் ஏமாற்றுவதற்கு தொழிற்சங்கங்கள் துணை போகும் என்றால் தொழிற்சங்கங்களையும் இவ்வாறே எரியூட்டுவோம் என இங்கு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர். இதேவேளை, போராட்டத்தில் தீ வைக்கப்பட்ட உருவ பொம்மையை லிந்துலை பொலிஸார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அதேவேளை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என, பொலிஸாரால் அறிவித்த போதும், தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் அம்பியூலன்ஸ் வண்டியை மட்டும் செல்ல அனுமதித்த தொழிலாளர்கள் ஏனைய வாகனங்களை செல்லவிடவில்லை.

இதனால் சுமார் ஒரு மணி நேரம் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பொலிஸ் உத்தரவை மீறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்கப்போவதாகவும், அவர்கள் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் திரட்டப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை இன்று தலவாக்கலை தொழிற்சாலைக்கு அருகிலும் அத்தோட்ட மக்கள் வாகன நெரிசலை ஏற்படுத்தாது போராட்டத்தை நடத்தினர். அதேபோன்று தலவாக்கலை நானுஓயா தோட்ட தொழிலாளர்களும் தலவாக்கலை நகரசபைக்கு முன்பாக பிரதான வீதிக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு தலவாக்கலை கிறேட்வெஸ்டன், கல்கந்தவத்தை ஆகிய தோட்டங்களிலும் மெராயா தங்ககலை, ஊவாக்கலை ஆகிய தோட்டங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்றது. ஹட்டன் பிரதேசத்தில் வட்டவளை மற்றும் குயில்வத்தை ஆகிய தோட்டங்களின் தொழிலாளர்களின் போராட்டமானது ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியை அண்மித்தே இடம்பெற்றது. மேலும் பொகவந்தலாவ, நோர்வூட், பத்தனை குயின்ஸ்பெரி, சாமிமலை கவரவில் என பல பாகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அதேபோன்று நுவரெலியா பகுதியில் நானுஓயா தோட்டப் பகுதிகளிலும் 8வது நாளான போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.