sampanthan‘பிளவுபடாத நாட்டுக்குள் அனைத்து மக்களும் உள்ளடங்கப்படக்கூடிய வகையில் அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்கான ஒத்துழைப்புக்கள், முயற்சிகளை நாங்கள் நல்கி வருகின்றோம்’ என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,
‘தேசிய விளையாட்டுக்கள் மூலம் மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட்டு, ஒற்றுமை வளர்க்கப்படவேண்டும். ஒரு நாட்டைச் சேர்ந்தவர்களாக நாங்கள் வாழவேண்டும். அதற்கு சில கருமங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நாடு சுதந்திரமடையும் போது, பெருன்பான்மையினம் மாத்திரம் சுதந்திரமடைந்தது. மாறாக சிறுபான்மையினம் சுதந்திரமடையவில்லை. காரணம், சகல மக்கள் மற்றும் கட்சிகளை உள்ளடக்கிய வகையில், அரசியல் சாசனம் உருவாக்கப்படவில்லை. கடந்த காலங்களில் தனிப்பட்ட கட்சிகளால், ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெறாமல் அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டது. இதனால், தான் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒற்றுமைப்படுத்தவில்லை.

அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியல் சாசனம் உருவாக்கப்படவேண்டும். தற்போது, இண்டு பிரதான கட்சிகள் நாட்டை ஆட்சி புரிகின்றனர். தற்போது, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. மக்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ உரித்துடையவர்கள், என்ற அடிப்படையில், அரசியல் அதிகாரங்கள் பகிரப்பட்டு, இறைமைகள் மதிக்கப்பட்டு, இறைமையின் அடிப்படையில் அரசியல் சாசனத்தில் உருவாக்கப்படவேண்டும். அவ்வாறு இந்த அரசியல் சாசனம் உருவாக்கப்படும் என நம்புகின்றோம். அதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் நாங்கள் நல்கி வருகின்றோம். தொடர்ந்தும் நல்குவோம்’ என, அவர் மேலும் தெரிவித்தார்.