sri-lanka-south-koreaஇலங்கை மற்றும் தென்கொரியாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தினை தென்கொரிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் வீ சேங்கோ மற்றும் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் ருவான் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
இது தொடர்பில் ருவான் விஜேவர்தன தெரிவிக்கையில், தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இலங்கை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சிறப்பு பயிற்சிகள் வழங்க எதிர்பார்த்துள்ள அதேவேளை இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தென்கொரிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பயிற்சி வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமேயில்லை-அரசாங்கம்-

புதிய அரசியலமைப்பு மூலம் எந்தவொரு சமஷ்டி முறையை உருவாக்குவதற்கும் அரசாங்கம் அனுமதி அளிக்காது என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“புதிய அரசியலமைப்பு மூலம் எந்தவொரு சமஷ்டி முறையை உருவாக்குவதற்கும் நாம் அனுமதிக்க மாட்டோம். அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் பாதுகாக்கப்படும். புதிய அரசியலமைப்பை உருவாக்குவற்கான நாடாளுமன்றக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பில் பௌத்த மதம் முக்கியத்துவம் இழக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர். அவ்வாறு எதுவும் நடக்காது என்று என்னால் உறுதியாக கூற முடியும். புதிய அரசியலமைப்பு இன்னமும் கலந்துரையாடல் நிலையில் தான் உள்ளது. இன்னமும் ஒரு பந்தியோ, பிரிவோ கூட வரையப்படவில்லை.

எதற்கு இணங்கலாம், எதற்கு இணங்க முடியாது என்று விவாதித்து வருகிறோம். எல்லா இனங்களும் அமைதியாக வாழக் கூடிய அரசியலமைப்பு ஒன்றே நாட்டுக்குத் தேவை.எத்தனை பேரணிகள் நடத்தப்பட்டாலும் பௌத்த மதத்துக்கோ நாட்டின் ஒற்றுமைக்கோ ஆபத்தான எதையும் அரசாங்கம் செய்யாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.