மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்றுகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் வி.கணேசமூர்த்தி (58வயது) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், களுவாஞ்சிகுடியை சேர்ந்த வடிவேல் கிருஸாந்த் (18வயது) என்னும் இளைஞன் படுகாயமடைந்துள்ளார். இவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எருவில் பழைய பொலிஸ் நிலையம் வீதியில் நடந்து சென்றவரின் மீது வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாடை இழந்து மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை நேற்றுமாலை வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
தும்பங்கேணி சந்தியில் மோட்டார் சைக்கிளில் சிறிய ட்ரக் மோதியதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் படுகாயமடைந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.