courtsயாழ். தென்மராட்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமஅலுவலர் பிரிவில் கடமையாற்றும் பெண் கிராம அலுவலரை கடத்திய மூவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 13 மாத சிறைத்தண்டனை விதித்து, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி சிறீநிதி நந்தசேகரன், நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், கிராம அலுவலரின் சகோதரனை தாக்கி, அவருடைய 3 பற்களை உடைத்தமைக்காக ஒரு பல்லுக்கு 1 இலட்சம் ரூபாய் வீதம் 3 பற்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி குறித்த கிராமஅலுவலர், தனது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் அலுவலகத்துக்குச் சென்றபோது, வாகனத்தில் வந்தவர்கள் இவர்களை மறித்து, சகோதரனை அடித்துவிட்டு கிராமஅலுவலரை இலக்கத்தகடற்ற வாகனத்தில் கடத்திச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர், இலக்கதகடு மறைக்கப்பட்ட துணி காற்றில் விலகியபோது, இலக்கத்தகட்டின் இலக்கத்தைக் குறித்து கொடிகாமம் பொலிஸாரிடம் கையளித்திருந்தார்.

இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்ட நிலையில், கடத்தப்பட்ட வாகனம் புதுக்குடியிருப்பு பகுதியால் சென்று கொண்டிருந்தபோது, புதுக்குடியிருப்பு பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, வாகனத்தில் மயங்கிய நிலையில் இருந்த பெண் கிராமஅலுவலர் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், வாகனத்தில் இருந்து 5 பேரையும் பொலிஸார் கைதுசெய்தனர்.

குறித்த பெண் கிராம அலுவரை, திருமணம் செய்யுமாறு நபர் ஒருவர் தினமும் அச்சுறுத்தி வந்ததாகவும் இதனாலேயே அவர் கடத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, இவர்களில் வான் சாரதியும் பிறிதொரு நபரும் இந்தச் சம்பவத்துடன் தொடர்பற்றவர்கள் என வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

மிகுதி 3 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், நேற்றையதினம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.