missingகிளிநொச்சி நகரில் நேற்றுமுன்தினம் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் இளம் குடும்பஸ்தர் கிட்ணசாமி ரதீஸனின் மனைவி சர்மிளா ரதீஸன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

யாழ்ப்பாணம் – இடைக்குறிச்சி – வரணியை சேர்ந்த 35 வயதுடைய வர்த்தகரான கி.ரதீஸன் கிளிநொச்சி நகரில் வைத்து நேற்று முன்தினம் நண்பகல் இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. குறித்த வர்த்தகர் தனது வீட்டில் இருந்து கிளிநொச்சியில் உள்ள அவரது அச்சகத்திற்கு சென்றநிலையிலேயே கடத்தல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. கடத்தல் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் நேற்றையதினம் மாலை குறித்த இளம் குடும்பஸ்தர் கி.ரதீஸனின் மனைவி சர்மிளா ரதீஸன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமற்போன தினத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வர்த்தக நிலையத்தில் நிறுத்திவிட்டு தனியாக நடந்து சென்றுள்ளமை சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது. எனினும் அவருடைய தொலைபேசி அழைப்புகள் தொடர்பான பதிவுகளை பெறுவதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.