தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிரித்தானிய கிளை அமைப்பாளரும், மத்திய செயற்குழு உறுப்பினருமான தோழர் ஜெயம் (வேலாயுதப்பிள்ளை ஜெயபாலன்) அவர்களின் இறுதி நிகழ்வு நேற்று (13.10.2016) லண்டனில் நடைபெற்றது.
அஞ்சலி நிகழ்வுகளைத் தொடர்ந்து அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. பிரித்தானிய மண்ணில் நீண்டகாலம் கழகத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்த மூத்த தோழரின் இறுதி நிகழ்வில் லண்டனுக்கு வெளியே பல மைல்கள் தொலைவில் இருந்து கழக தோழர்கள் பலர் வந்து தமது இறுதி மரியாதையை செலுத்தியிருந்தனர். கழகத்தின்(புளொட்) பிரித்தானிய கிளையின் தோழர் போல் சத்தியநேசன் (நியுகாம் கவுன்சிலர்) அவர்கள் கட்சியின் சார்பாக அஞ்சலி உரையாற்றினார். கண்ணீர்மல்க உரையாற்றிய போல் அவர்கள்,
தோழர் ஜெயம் அவர்கள் பிரித்தானிய மண்ணிற்கு வருகை தந்த பல தமிழ் மக்களிற்கு பாரிய பங்களிப்பை ஆற்றியிருந்ததையும், அன்று கழகத்தின் அலுவலகம் பல தமிழ்மக்களிற்கு அடைக்கலம் வழங்கும் ஒர் முகாமாக அல்லது தங்குமிடமாக செயல்பட்டதாகவும், அவற்றுக்கெல்லாம் தோழர் ஜெயம் போன்ற தோழர்களின் பங்களிப்பு நினைவுகூரப்பட வேண்டியது என்றும் தனது அஞ்சலி உரையில் தெரிவித்ததுடன். புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் அவர்களின் இரங்கல் செய்தியையும் பகிர்ந்து கொண்டு தோழர் போல் அவர்கள் அஞ்சலி உரையாற்றினார்.
பின்னர், கழகத்தின் தோழர்களால் புளொட் அமைப்பின் சின்னம் பொறிக்கப்பட்ட மலர்வளையம் முன்னே எடுத்துவரப்பட, அதன் பின்னர் அவரது பூதவுடல் தாங்கிய பேழை தேவாலயத்தில் இருந்து அடக்கம் செய்யப்படும் சமாதிக்கு எடுத்துவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.