hhhhவவுனியா மூன்றுமுறிப்பு தச்சன்குளம் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் இன்று பகல் வவுனியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா, தச்சன்குளம் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றை அதன் உரிமையாளர் நீர் இறைத்து துப்புரவு செய்தபோது, கிணற்றுக்குள் இருந்து இரு தகரப் பெட்டிகளை மீட்டுள்ளார். குறித்த தகரப் பெட்டிகளில் வெடிபொருட்கள் இருப்பதைக் கண்டு வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து குறித்த வெடிபொருட்களை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர். ஜே.எம்.மோ கிளைமோர்- 01, மிதிவெடிகள்- 08, பரா வெளிச்சக்குண்டு- 04, டிக்னேற்றர்- 50 என்பன இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

கிணற்றுக்குள் மேலும் பல வெடிப்பொருட்களை அவதானித்த பொலிஸார், அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த தோட்டம், வவுனியாவிலுள்ள பிரதான இராணுவ முகாமாகிய ஜோசப் முகாமுக்கு அருகில் அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.