சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு இன்றுகாலை விழிப்புணர்வு நடைபவனி ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ் சுன்னாகம், சுழிபுரம், நல்லூர், மானிப்பாய், நீர்வேலி, நல்லூர் பாரம்பரியம், நகரமைய றோட்டரக் கழகங்கள் மற்றும் கருவி நிறுவனமும் இணைந்து குறித்த நடைபவனியை ஒழுங்கு செய்திருந்தன. இன்றுகாலை 8 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகிய குறித்த நடை பவனியானது கல்வியங்காட்டு சந்தியில் நிறைவடைந்தது. இந்நடை பவனியில் றோட்டரிக் கழக அங்கத்தவர்கள், ஊர்காவற்துறை லயன்ஸ் கழக அங்கத்தவர்கள், கருவி நிறுவன அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடர்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு துலாபரமாக வெளிச்சமிட்டு காட்டுவதே வெள்ளைப் பிரம்பு தினமாகும்.
1961ஆம் ஆண்டு முதல் வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதன்படி ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15ம் திகதி வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.