kilinochchiபொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அவர்களுக்கு நீதி கோரியும் இன்றுகாலை கிளிநொச்சியில் கண்டனப் பேரணி இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இப்பேரணி, கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்ததுடன் பொலிஸ் அராஜகம் ஒழிக, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தது. அங்கு மேலதிக அரசாங்க அதிபரிடம் கண்டன மனுவினை பேரணியில் கலந்து கொண்டோர் கையளித்தனர். இந்த பேரணியில், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், சிவில் பொது அமைப்புக்கள், வர்த்தகர்கள், தமிழ் கட்சிகளின் பிரமுகர்கள், கல்விச் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்