கொழும்பு, மட்டக்குளி, சமித்புர பகுதியில், நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இருவரைக் கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த எழுவரில் நால்வர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட முன்னரே, உயிரிழந்திருந்ததாகவும், ஏனைய மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ஹெரோய்ன் கடத்தலில் ஈடுபடும் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகறாறு காரணமாகவே, துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இரண்டு குழுக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல், ஒரு குழுவைச் சேர்ந்தவரின் தந்தையின் மரணத்துக்கு வித்திட்டது.
இதையடுத்து, அடுத்த குழுவைச் சேர்ந்த ஒருவரின் தாய் கொல்லப்பட்டார். இதுவே, இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்துக்கான காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, கொழும்பு குற்றப் பிரிவினரை, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பணித்தார். அதற்கிணங்க, சந்தேகநபர்களை இனங்கண்டுள்ளதாகவும் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப் பிரிவின் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஷாந்த சொய்சா தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில், சமித்புர பகுதியைச் சேர்ந்த பிரசாத் சத்துரங்க (வயது 24), தெனுவன் (வயது 26), நுவன் சஞ்ஜீவ (வயது 29), மொஹமட் {ஹஸைன் மொஹமட் நஸார் (வயது 29) ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர்.