arpattamமட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி நாவலடிப் பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ள காணிகளை மீளப் பெற்றுத்தருமாறு கோரி மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் நாவலடி இராணுவ முகாமுக்கு முன்பாக இன்று புதன்கிழமை பாதிக்கப்பட்ட மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தெடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில், ‘1968ஆம் ஆண்டு முதல் மேற்படி பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்துவந்த நாம், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 1990ஆம் ஆண்டு எங்களின் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வசித்து வருகின்றோம். 1990ஆம் ஆண்டு முதல் இராணுவ முகாம் அமைந்துள்ள எங்களின்; காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதுடன், நட்டஈட்டையும் பெற்றுத்தந்து எங்களை மீள்குடியேற்ற வேண்டும் என்று அரசாங்க அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் தெரியப்படுத்தியபோதிலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளோம்.

குறித்த இராணுவ முகாமானது 18 பேரின் காணிகளைக் கொண்டு அமைந்துள்ளது. இருப்பினும், 02 பேருக்கு மாத்திரம்; பிரதேச செயலகத்தால் மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, எஞ்சியுள்ள 16 பேரினதும் காணிகளை காணிகளை பெற்றுத்தர வேண்டும். எங்களின் காணிகள் கிடைக்கும்வரை எங்களின் போராட்டம் தொடரும்’ என்றனர்.

உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு வருகைதந்த கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் அன்வர் நௌஸாத் மற்றும் ஓட்டமாவடிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட்டிடமும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டிடம்; வழங்குவதற்கான மகஜரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கையளித்துள்ளனர்.

இது தொடர்பாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் கூறுகையில், ‘இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் குடியிருந்த மக்களுக்கான காணி வழங்குவது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் தனது மேலதிகாரிகளுக்கு அறிவித்துள்ளோம். மேலும், இராணுவம் குறிப்பிட்ட காணிகளை விடுவிக்கும் பட்சத்தில் அவர்களுக்குரிய காணிகள் கையளிக்கப்படும்’ என்றார்.