jaf.university (2)யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றச் செயற்பாடுகள், இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம், 21ஆம் திகதி அதிகாலை, கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை மாணவர்கள் பகிஸ்கரித்தனர். இந்நிலையில், மாணவர்களும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரும், நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

ஒரு வார காலத்துக்குள் விசாரணை அறிக்கையின் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைப்பதாகவும் மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

இருந்தும், ஜனாதிபதியின் உறுதிமொழிகள் தொடர்பில் சக மாணவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே கல்விச் செயற்பாடுகளை தொடர்வது அல்லது தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுதல் ஆகிய முடிவுகள் எடுக்கப்படும் என சந்திப்பில் கலந்துகொண்ட மாணவப் பிரதிநிதிகள் கூறினர்.

இதனையடுத்து, இன்று மாணவர்களுடன் கலந்துரையாடினர். இதில் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, பல்கலைக்கழக செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.