accident (12)அம்பாறை, ஒலுவில் அல்-ஜாயிஸா வித்தியாலயத்துக்கு அருகில் இன்று உழவு இயந்திரப்பெட்டி ஒன்று குடைசாய்ந்ததில் 20 இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒலுவில் அல்-ஜாயிஸா வித்தியாலயத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர் முகாம் நடைபெற்று வருகின்றது. இம்முகாமில் கலந்துகொண்ட மேற்படி இளைஞர்கள் ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயத்தில் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.மேற்படி வித்தியாலயத்தில் இவர்கள் சிரமதானத்தை முடித்துவிட்டு, மீண்டும் அல்-ஜாயிஸா வித்தியாலயத்துக்கு உழவு இயந்திரத்தில் சென்றுகொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளாகினர்.

18 வயது முதல் 24 வயதுவரையான இளைஞர்களே காயமடைந்துள்ளனர். இவர்கள் ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

காயமடைந்த இளைஞர்கள் அக்கரைப்பற்று, அம்பாறை, கல்முனை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில்; ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.