sri-kantha-teloயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைகள் குறித்து, விரிவாக ஆராய, ரெலோ ஏழு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட கட்சிகள் இன்று வல்லை வெளியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்துள்ளன.

இதில், இலங்கைத் தமிழரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய ஏழு கட்சிகள் கலந்து கொண்டன. இங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு ரெலோ கட்சியைச் சேர்ந்த என். சிறிகாந்தா கருத்துத் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருடைய படுகொலை தொடர்பில் பாரபட்சம் அற்றதும் பூரணமானதுமான புலனாய்வு விசாரணை, எவ்வித தலையீடுகளும் அற்ற நீதி விசாரணைகளையுமே நாங்கள் கோருகிறோம்.

மேலும் இப் படுகொலைகளின் பின்னணியும் காரணிகளும் விசாரணையூடாக கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்விதம் முழு உண்மையும் கண்டறியப்பட்டால் மாத்திரமே எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க முடியும் என நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப் படுகொலைகளைத் தொடர்ந்து வாள்வெட்டுக் குழுக்கள் எனக் கூறப்படுகிற குழுக்களை சம்பந்தப்படுத்தி வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் மற்றும் நிகழ்ந்த தாக்குதல் சம்பவங்கள் காரணமாக வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் மத்தியில் ஓர் அச்ச சூழ்நிலை ஏற்பட்டிருப்பதையும்

அதனை மேலும் தீவிரப்படுத்தும் விதத்தில் சில தரப்பினரினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை சுட்டிக்காட்டியும் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சட்டமும் ஒழுங்கும் நிலை நாட்டுதல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தக் கோரி ஓர் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள். இது எங்கு எப்போது நடத்தப்படும் என பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலைமை தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, பிரதமரை கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட குழு சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.