கடந்த எட்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த ஊனமுற்ற முன்னாள் இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. ஓய்வூதியம் வழங்கத் தகுதியான கால எல்லைக்கு முன்னதாக (12 வருடங்கள்) அங்கவீனமுற்ற நிலையில் சேவையில் இருந்து இடைவிலகிய முன்னாள் இராணுவ வீரர்கள் கடந்த சில நாட்களாக போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
தமக்கு ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தியே அவர்கள் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இந்நிலையில் இன்று பேரணியாக ஜனாதிபதி செயலகம் வரை சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், செயலகத்தினுல் அத்துமீறி நுழைய முற்பட்டதாக கூறப்பட்டு, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் எதிர்வரும் பெப்ரவரி முதல் அவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற எழுத்துமூல ஆவணத்தை வழங்கி வைத்தார். இதனையடுத்து போராட்டத்தை நிறைவு செய்ய முன்னாள் இராணுவ வீரர்கள் தீர்மானித்துள்ளனர்.