former-ltteபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியான நடராஜா சபேஷ்வரனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சந்தேகநபரை எதிர்வரும் டிசம்பர் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு புதுக்கடை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் 23ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட நடராஜா சபேஷ்வரன் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாகவும், கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார் என சந்தேகநபர்மீது பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அவரிடம், பயிற்சி பெற்ற ஒருவர் தங்களிடம் இதனை தெரிவித்துள்ளதாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இருக்கின்றதா என நீதிபதி இதன்போது வினவினார். எனினும், இதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வேண்டும் என பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையினையடுத்து நீதிவான் விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதேவேளை, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான நடராஜா சபேஷ்வரன் கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவராவார்.

நடராஜா சபேஷ்வரன் இந்தியா சென்றபோது, அங்கிருந்து அவர் மீண்டும் திருப்பியனுப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கடந்த மாதம் 23ஆம் திகதி கைது செய்திருந்தனர்.