arrestபல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் ஒருவர் நேற்றுக்காலை யாழ்ப்பாண பொலிஸாரால் யாழ் புகையிரத நிலையத்தில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய சசிகலா என்ற குடும்பப் பெண் இலங்கை பூராகவும் பலதரப்பட்ட பண மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் குறித்து பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவரை பிடிக்க 38 பிடியாணைகள் நீதிமன்றங்கள் பிறப்பித்த போதிலும் நீண்டகாலமாக பொலிஸாருக்கு தண்ணி காட்டி தப்பித்து வந்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணத்திலும் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி குடும்பஸ்தர் ஒருவரிடம் 10 இலட்சம் ரூபா பண மோசடி செய்ததாக இவர்மீது வழக்குப் பதியப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவரைத் தேடி வலைவீசிய யாழ் பொலிஸார் நேற்றையதினம் யாழ் பிரதான புகையிரத நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர். யாழ் புகையிரத நிலையத்தில் குறித்த பெண் இருப்பதாக தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கடந்த செவ்வாய் இரவு குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் நேற்று அதிகாலை குறித்த பெண்ணைக் கைது செய்திருந்தனர். குறித்த பெண்ணினுடைய கணவர் இலங்கை இராணுவத்தில் பணிபுரிபவர் என்று கூறப்படுகின்றது.