sithadthanபுதிய அரசியலமைப்பு தொடர்பான செயற்பாடுகளின் ஊடாக சித்தார்த்தன் போன்றவர்களுக்கு தலைவர் பதவிகளை வழங்கி நாட்டினை பிளவுபடுத்தும் செயற்பாட்டினை இந்த அரசாங்கம் முன்னெடுப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய பிக்குகள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

நேற்று வியாழக்கிழமை கொழும்பு 07 இல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தேசப்பற்றுள்ள தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவரான பென்கமுவே நாலகதேரர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தினை அரசியலமைப்புச் சபையாக மாற்றி இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தற்போது இந்த அரசியலமைப்பு சபையில் 6 உபகுழுக்கள் அமைக்கப்பட்டு அரசியலமைப்பு செயற்பாடுகளை இந்த அரசாங்கம் இரகசியமாக முன்னெடுத்து வருகிறது. மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிராக சென்றே இந்த அரசாங்கம் அரசியலமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் உயர்ஸ்தானிகரின் அறிக்கை, அமெரிக்காவால் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஆகியவற்றில் புதிய அரசியலமைப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே இந்தப் புதிய அரசியலமைப்பு தொடர்பான செயற்பாடுகளின் ஊடாக சித்தார்த்தன் போன்றவர்களுக்கு தலைவர் பதவிகளை வழங்கி நாட்டினை பிளவுபடுத்தும் செயற்பாட்டினை இந்த அரசாங்கம் கொண்டு செல்கின்றது.

தற்போது சர்வதேசத்தின் தேவைக்கு ஏற்றாற்போல புதிய அரசியலமைப்பு ஆங்கிலத்தில் வரையப்பட்டு வருவதாக எமக்கு தெரியவந்துள்ளது. இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றினை வரைவதானால் அது சிங்கள மொழியிலேயே வரையப்பட வேண்டும்.

சிங்கள மொழியில் வரையப்பட்ட பின்னரே, அந்த சட்டவரைபு ஆங்கிலத்திலும், தமிழிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.
(நன்றி : உதயகார்த்திக் – தினக்குரல் 11.11.2016)