samimalaiஅம்பகமுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிமலை – பெயார்லோன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தினால் 29 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

சாமிமலை சின்ன சூரியகந்தத் தோட்ட லயன் குடியிருப்பில் வசித்து வந்த எட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த 29 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டு சிறுவர் நிலையம் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை, பெய்த கடும் மழையினால் குறித்த லயன் குடியிருப்புப் பகுதியில் 30 மீட்டர் தூரம் வரையில் வெடிப்புடன் மண்சரிவு ஏற்பட்ட நிலையிலேயே, பாதுகாப்பின் நிமித்தம் இவர்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர். எனினும் இவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை இதுவரை எவரும் செய்து கொடுக்கவில்லை என இம் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியின் அபாயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு அறிவித்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.