wdereஇனங்களுக்கிடையில் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான துவேசப் பேச்சுக்களை கட்டுப்படுத்துவதற்கு சிங்கள சிவில் அமைப்புக்கள், நல்லெண்ண முற்போக்கு சக்திகள் உடனடியாக முன்வரவேண்டும் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

பௌத்த தேரரின் இனத்துவேச பேச்சுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வீதியிலிறங்கி போராடுவதற்கு எந்தவிதமான தயக்கமும் இல்லாதிருக்கின்றபோதும் தற்போதைய சூழலில் அது சிங்களவர்களுக்கு எதிராக தமிழர்களின் போராட்டமாக சித்தரிக்கப்படும் அபாயமுள்ளதால் பொறுமை காப்பதாகவும் அமைச்சர் மனோகணேசன் சுட்டிக்காட்டினார். மட்டக்களப்பு விகாரதிபதி அம்பிட்டிய சுமண ரத்தன தேரர் நில அபகரிப்பை தடுப்பதற்கு சென்ற பட்டிப்பளை பிரதேச செயலக குழவினரையும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை தேசிய இனங்களையும் மிக கடுமையாக இனத்துவேச வார்த்தைகளையும் பயன்படுத்தி எதிர்த்தமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மனோகணேசன் இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு விகாரதிபதி சிறுபான்மை தேசிய இனங்களையும் அதிகாரிகளையும் மிகக் கடுமையான இனத்துவேச வார்த்தைகளை பயன்படுத்தி கடுமையான திட்டித்தீர்த்துள்ளார். இவ்வாறான செயற்பாடு மிகவும் பாரதூரமானவொரு விடயமாகும். இது கண்டிக்கப்படவேண்டிய விடயமாகும். இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டியதாகும்.

தற்போதைய நிலையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி சகவாழ்வை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் படிப்படியாக முன்னெடுக்கப்படுகின்றன. அந்தப் பாரிய பொறுப்பு என்னிடத்தில் ஒப்டைக்கப்பட்டிருக்கின்றது.

அவ்வாறான நிலையில் இவ்வாறு தொடர்ச்சியாக இனங்களுக்கிடையில் காழ்ப்புணர்ச்சிகளை ஏற்படுத்தி முரண்பாடுகளை அதிகரிக்கும் நோக்கத்துடனான இனத்துவேச பேச்சுக்களை பார்த்துக்கொண்டு தொடர்ந்தும் பொறுமையாக எம்மால் இருக்க முடியாது என்றார்.