jasmni xookaஇலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், இராணுவம் உட்பட அரச படையினர் தொடர்ந்தும் வெள்ளைவான் கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டும், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்,

இவை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு இலங்கைக்கு நேரடியாக விஜயம்செய்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் புலனாய்வுத்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் தமக்கு இருக்கும் தண்டனைகளில் இருந்து விலக்குப்பெறும் சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி, தொடர்ந்தும் இரகசிய முகாம்களை இயக்கி வருவதுடன், அங்கு கொடூரமான சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் 59 ஆவது கூட்டத்தொடரில் நாளைய தினம் இலங்கையில் தொடரும் சித்திரவதைகள் குறித்து ஆராயப்படவுள்ள நிலையிலேயே சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றார்.

சித்திரவதைகளும், ஆட்கடத்தல்களும் கட்டமைப்பு ரீதியாக முன்டுக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவ்வாறான கொடூரங்களைத் தடுக்கவோ, அவற்றை மேற்கொள்ளும் இராணுவம் உட்பட அரச படை யினரையும், சித்திரவதைகளுக்கு சார்பான அரசியல்வாதிகளையும் கட்டுப்படுத்தவோ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தாலும் முடியாதுள்ளதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மீன் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

இவற்றை உண்மையில் தடுக்க வேண்டுமாயின் இலங்கை அரச படைக் கட்டமைப்பில் முழுமையான மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு, அரசியல் விருப்பம் மற்றும் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள சூக்கா, ஆனால் துரதிஸ்டவமாக தற்போதைய அரசாங்கத்திடமும் அதனை காணமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் இராணுவம் உட்பட அரச படையினராலும், புலனாய்வாளர்களாலும் கடத்தப்பட்டு, சித்திரவதை முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும் உட்படுத்தப்பட்ட 36 தமிழர்களிடம் ஐரோப்பிய நாடுகளில் வைத்து சாட்சியங்களை பதிவுசெய்துகொண்டுள்ளதாகவும் சூக்கா தெரிவிக்கின்றார்.

இவர்களில் பத்து பேரினது அகதி கோரிக்கை ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ள்ளதாகவும் குறிப்பிடும் அவர், இதன்மூலம் அவர்களுக்கு நேர்ந்த கொடூரங்கள் உண்மையானவை என்பதை வெளிநாட்டு அரசுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் போருக்குப் பின்னரான சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்களிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதுடன், இந்தக் குற்றங்களுக்கு பொறு ப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் சிலரையும் அடையாளம் கண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெறுவதை வெளி உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே தனக்கு நேர்ந்த கொடூரங்களை கூற முன்வந்ததாக இலங்கையின் வட பகுதியில் வைத்து இந்த ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதாகக் கூறப்படும் இளம் தமிழ் யுவதியொருவர் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திடம் அளித்தவாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் சூக்கா தெரிவித்தார்.

இதேவேளை தனக்கு நேர்ந்தது போல் ஒரு கொடூரம் மற்றுமொருவருக்கு நேரக் கூடாது என்று சித்திர வதைக்கு உள்ளான இளைஞர் ஒருவர் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திடம் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து இராணுவம் உட்பட அரச படையினரால் மிகவும் கொடூரமான சித்திரவதை முறைமைகளைப் பின்பற்றி தொடர்ச்சியாக அடுத்தடுத்து மூன்று தடவைகளுக்கு மேல் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான பலர் தமக்கு சாட்சிகள் அளித்துள்ளதாகவும் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

தண்ணீர் குழாய்களால் அடிப்பதுடன், சிகரட்டால் சுடுவதும், இறும்புக் கம்பிகளை சூடாக்கி முதுகில் வைப்பதும், வயிர்களால் தாக்குவதும், தலைக்கு தொடர்ச்சியாக நீரை பாய்ச்சி துன்புறுத்துவதும், மிளகாய்த்தூள் மற்றும் பெற்றோல் போடப்பட்ட பொலித்தீன் பைகளால் தலையை மூடிக் கட்டி சித்திரவதை செய்வது போன்ற மிகவும் கொடூரமான சித்திரவதை முறைமைகளுக்கு ஆண், பெண் என இரு பாலாரையும் உட்படுத்தியுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நீண்டகாலமாக இராணுவ முகாம்கள் மற்றும் ரகசிய சித்திரவதை முகாம்களில் இடம்பெற்ற இவ்வாறான கொடூரங்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டுகளிலும் இடம்பெற்றுள்ள தாகவும், இவற்றில் உயர் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளே தொடர்புபட்டுள்ளதாகவும் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக புதிய அட்சியின் கீழ் கடத்தப்பட்ட 35 பேரில் 9 பேர் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் யஸ்மின் சூக்கா, இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மதித்து செயற்படுவதாக சர்வதேச சமூகத்திடம் அளித்த வாக்குறுதிகளை மதித்து செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.