australia_navyபாக்கு நீரிணையில் இந்திய – இலங்கைக் கடற்படைகள் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்த இலங்கையின் யோசனையை இந்தியா பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இணங்கியுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்தக் கூட்டு ரோந்து நடவடிக்கையை மேற்கொள்வது குறித்த யோசனையை இலங்கை, நீண்டகாலமாக வலியுறுத்தி வந்துள்ளது. எனினும், இந்தியா அதற்கு இணங்கவில்லை. அண்மையில் புதுடெல்லியில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது, மீன்பிடி கூட்டுச் செயலணியொன்றை அமைக்க, இரு நாடுகளும் இணங்கியிருந்தன. இந்த மீன்பிடிக் கூட்டுச் செயலணி என்ற விடயத்துக்குள், இரு நாடுகளின் கடற்படைகளும் கூட்டு ரோந்தில் ஈடுபடும் ஒத்துழைப்புக்கான சாத்தியங்கள் குறித்து ஆராயும் விடயமும் உள்ளடங்கியுள்ளது.

இந்தக் கூட்டுச் செயலணியில், இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சுக்கள், கடலோரக் காவல் படைகள் மற்றும் கடற்படைகளின் பிரதிநிதிகள் இடம்பெறவுள்ளனர். இந்தக் கூட்டுச் செயலணி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டங்களை நடத்தவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.