policeஇலங்கை கண்டியில் அங்கும்புர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். அதுகுறித்து, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து ரி56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
கண்டி – அங்கும்புர பெபிலகொல்ல முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில் கார் ஒன்றில் வந்த சிலர், வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி விட்டு அதே காரில் தப்பிச் சென்றவர்களில் ஒருவர் கபல்கஸ்தென்ன பகுதியில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப் பிரதேசவாசிகள், சந்தேக நபரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, சந்தேக நபர்கள் பயணித்த கார், பூஜாபிட்டி பகுதியில் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.